பக்கம் எண் :

148
 
சமஸ்கிருத இலக்கியத்துக்கு முன்பே தமிழகத்தில் முத்தமிழ் இலக்கண இலக்கியமும்
முத்தமிழ் கலையும் உண்டு. ஆனால் சமஸ்கிருதத்துக்கே வழிகாட்டிய தமிழ்
இலக்கியத்துக்கு மாநிலப் பல்கலைக் கழகங்களில் இடம் இல்லை; அதன் நிழலாக
நிலவிய சமஸ்கிருத இலக்கியத்துக்கே இடம் தரப்பட்டுள்ளது.
 
     தென்னாடு எழுப்பிய விடுதலை முழக்கத்தின் புறஓசையுடன் மாநிலம்
நிறைவடைகின்றது. ஆனால் அகஓசையைத் தென்னாடு எழுப்பியுள்ளது, எழுப்புகிறது.
 
தென்னாட்டு அகவிடுதலை வரலாறு
 
     வ.உ.சிதம்பரனார் புற விடுதலையைக் கனவு கண்ட அதே நாளிலேயே,
அகவிடுதலையைக் கனவு கண்டார். மற்றொரு தமிழகப் பெரியார் டாக்டர் சி.நடேசனார்,
தென்னாட்டின் தூய பழம்பெரும் நாகரிகத்தை வளர்க்க அவர் 1912-ல் திராவிட சங்கம்
அமைத்தார். புற விடுதலையை மட்டுமன்றி அக விடுதலையை - ஒற்றுமை, சமத்துவம்,
சகோதரத்துவம் ஆகிய பண்புகளை உடைய தென்னாட்டுத் தேசீய விடுதலையை
எழுப்ப அவர் முனைந்தார். 1916-ல் அது நேர்மைக் கட்சியாகவும், பெரியார்
ஈ.வெ.ராவின் தலைமையில் 1924-ல் தன்மான இயக்கமாகவும், 1944-ல் திராவிட
கழகமாகவும், 1948-ல் கலையறிஞர் சி.என்.அண்ணாத்துரையின் தலைமையில்
திராவிடமுன்னேற்றக் கழகமாகவும் மலர்ச்சியுற்று வந்துள்ளது. புறவிடுதலைக் கனவு
கண்டு அதனுள் அகவிடுதலையைக் குழைத்த பாரதியாரைப் போல, அகவிடுதலைக்
கனவு கண்டு அதில் புதிய நாட்டு விடுதலையாகிய புற விடுதலையைக் குழைத்துத்
தந்துள்ளார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
 
     நாடு என்ற சொல் பண்டு மிக்க குறுகிய ஒரு சிறிய எல்லையையே குறித்தது. நாடு
கடந்து பண்பாடு மட்டுமே வளர்ந்தது. ஆனால் அரசியல் எல்லை
பண்பாட்டெல்லையை எட்டிப் பிடிக்குந்தோறும் நாடு என்ற சொல்லும் விரிந்த
எல்லையைக்