பக்கம் எண் :

2

 
1000-க்கும் கி.பி. 500-க்கும் இடைப்பட்ட 1500 ஆண்டுகள் ஆகும். தென்னாட்டு
நாகரிகத்திற்கும், கிரேக்க உரோம நாகரிகங்களுக்கும் பலவகைத் தொடர்புகள் இருந்தன.
கிரேக்க உரோம நாகரிகங்களைவிடத் தென்னாடே பழமை வாய்ந்தது என்பதற்குரிய
சான்றுகள் காணப்படுகின்றன. ஆயினும், கிரேக்க உரோம நாகரிகங்கள் வரலாற்றின்
பழங்கதைகளான பின்னும் தென்னாடு இன்றும் நின்று நிலவுகின்றது.
 
நாகரிகப் பழமை
 
     பழம் பொருள் ஆராய்ச்சி மூலம் கிரேக்க உரோம நாகரிகங்களுக்கு முற்பட்ட
நாகரிகங்கள் பல இருந்தன என்று அறிகிறோம். இவற்றிற்குரிய சான்றுகள் *எகிப்து,
பாலத்தீனம், சால்டியா, பாபிலோன், சிறிய ஆசியா, சுமேர், ஏலம் முதலிய நாடுகளிலும்,
சிந்து வெளியிலும் கிடைத்துள்ளன. இவை யாவும் தென்னாட்டுடன் கூடிக் குலாவிய
தோழமை நாகரிகங்களே யாகும். இவற்றின் பழமை கி.மு. 3000 வரை, அதாவது
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். தென்னாட்டின் முழுப்பழமை இன்னும்
அறியப்படாவிட்டாலும், அது மேற்கூறிய நாடுகளைவிடப் பழமையானது என்று
திண்ணமாக அறிய முடிகிறது.
 
     சிந்துவெளி நாகரிகம் சிறப்பிலும் பழமையிலும் முற்கூறிய நாடுகளைவிட
முற்பட்டதாகக் காணப்படுகிறது. கி.மு.4000-லும், அதற்கு முற்பட்டு ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாகவும், சிந்துவெளி நாகரிகம் நிலவியிருந்தது என்று பழம் பொருள்
ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர்.
 
     நடு உலகெங்கும் பரவிப் பெருமையுடன் விளங்கிய இப் பழம்பெரு நாகரிகங்களில்
தென்னாட்டு நாகரிகம் ஒன்றே நின்று நிலைத்துள்ளது. மற்றவை யாவும் 'மண்ணிற்
புதையுண்ட நாகரிகங்களாய் விட்டன. மாண்ட இப்பழம் பெரு நாகரிகங்களின்
மாளாக்கன்னி' இளஞ்செல்வமாகத் திகழ்வது நம் நாடேயாகும்.
 

* Egypt, Palestine, Chaldea, Babylon. Asia Minor, Sumer, Elam