பக்கம் எண் :

25

 
காணப்படுகின்றது. மன்னரோடொப்பச் செல்வம் திரட்டிய வணிக மன்னர்
இப்பட்டினங்களில் வேயாமாடங்கள் அல்லது காரை வீடுகள் கட்டி இன்பவாழ்வு
வாழ்ந்தனர். பல நாடு கண்ட வணிக அறிஞர், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற
பெருமித உணர்வுடன் வாழ்ந்தனர்.
 
      தமிழில் நகர் அல்லது மருதநிலப் பேரூரில் வளர்ந்த பண்பாடே நாகரிகம்
எனப்பட்டது. ஆயினும் நகரநாகரிகம் தாண்டிப் பட்டின நாகரிகம் நாடு கடந்த உலகப்
பண்பாக வளர்ந்தது. தமிழர் நாகரிகத்துக்கு அடிப்படையான பண்பு இவ்வுலகப்
பண்பேயாகும்.
 
கற்காலம்
 
     உலக முழுவதும் நாகரிகம் ஒரே சமகால வளர்ச்சியாக வளரவுமில்லை. ஒரே
தொடர்ந்த வளர்ச்சியாக அமையவுமில்லை. உலக நாகரிகத் தொடர்பற்ற
ஒதுக்கிடங்களில் - பொதுவாக மலைக்குடியினரிடையிலும், சிறப்பாக வடதுருவப்
பகுதியிலும், ஆப்பிரிக்க ஆஸ்திரேலியப் பகுதிகளிலும் - குகை மனித நாகரிகம்,
கற்கால நாகரிகம் ஆகிய நிலைகளிலுள்ள மக்கள் இன்றும் வாழ்கின்றனர். வரலாற்றிலும்
தென் ஐரோப்பா, நடுஉலகு, தென்னாடு ஆகிய இடங்களில் நாகரிகம் சிறந்திருந்த
காலங்களில், வடஐரோப்பாவும் வடஉலகும் நாடோடி மக்களின் வேட்டைக்
காடுகளாயிருந்தன. கி. பி. 5-ஆம் நூற்றாண்டில் இந்நாடோடி மக்கள் நாகரிக
உலகின்மீது பரந்து தாக்கினர், பண்டைய நாகரிக ஒளி மங்கி மறுகிற்று. கி.பி.5-ம்
நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரையுள்ள இக்காலத்தை நாம் இடை இருள்
காலம் என்கிறோம்.
 
     சென்ற ஐந்நூறு ஆண்டுகளுக்குள் உலகில் - சிறப்பாக மேனாட்டில் - நாகரிகம்
மீண்டும் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இடைக்கால இருள் கடந்து பழங்கால நாகரிக
ஒளியின் ஊற்றைத் தற்காலத்துக்குக் கொண்டுவரப் பாலமாயிருந்த