பக்கம் எண் :

30
 
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் அகப்படுகின்றன.
மொகஞ்சதரோவின் பழமையை இது சுட்டிக்காட்டிற்று. அகழ்ந்த பின் இன்னும்
பல்லாயிர ஆண்டு பழமை உணரப்பட்டது. ஹரப்பாவில் ஒன்றன் கீழ் ஒன்றாக எட்டு
அடுக்கான நகரங்களும், மொகஞ்சதரோவில் ஏழு அடுக்கான நகரங்களும்
காணப்பட்டன. அவற்றில் கிடைத்த சின்னங்களால் அந்நாகரிகம்
மெசெபொட்டோமியாவிலுள்ள சுமேர், ஏலம் நாகரிகங்களுடன் தொடர்புடையதென்றும்,
அந்நகர்களின் சில அடுக்குகள் அவற்றுடன் சமகால வாழ்வுடையன என்றும்
அறியப்பட்டது. அடுக்குகள் சமகால எல்லை கடந்து இன்னும் கீழே செல்கின்றன.
ஆகவே இவ்வகழ்வு ஆராய்ச்சி மூலம் இந்நாகரிகம் எகிப்திய சுமேரிய
நாகரிங்களைவிடப் பழமையானதென்றும், அவற்றைக் காட்டிலும் பலவகை
முன்னேற்றங்களை உடையதென்றும் நாம் அறிகிறோம். அகழ்ந்த பகுதி பத்தில் ஒரு
பங்கேயானாலும், அந்த அளவிலேயே அது கி.மு. 3250-க்கு முன்னிலிருந்து கி.மு.2500
வரை நிலவியிருக்க வேண்டுமென்றும் கி.மு.2500-க்குப் பின் எக் காரணத்தாலோ
திடுமென அழிவெய்தி இருக்க வேண்டுமென்றும் அறிய முடிகிறது.
 
சிந்து வெளியின் நகரமைப்பும், மக்கள் வாழ்க்கைத் திட்டமும் கலைச்சிறப்பும் தற்கால
அறிஞர்களைத் திகைப் படையச் செய்கின்றன. கருவி வகையில் அது புதுக்கற்காலங்
கடந்து உலோக காலத்தில் புகுந்த நாகரிகமாயிருந்தாலும், பண்பாட்டு வகையிலும்
மற்றெல்லாத்துறைகளிலும் கிட்டத்தட்ட முழுநிறை முதிர்ச்சி அடைந்திருந்தது. அது
முற்கால நாகரிகங்களைத் தாண்டி, மேற்சென்றிருந்தது மட்டுமல்ல; இக்கால
நாகரிகங்களுக்குக்கூடப் பல வகைகளில் வழிகாட்டுவதாய் இருக்கிறது. பண்டை
நாகரிகங்கள் பலவற்றிலும் - இக்கால நாகரிகங்கள் பெரும்பாலானவற்றிலும் கூட -
மனித இனத்தின் பொருளும், நேரமும், அறிவும் பேரளவில் கடவுளர்க்குக் கோயில்
கட்டுவதிலும், மன்னர் இளங்கோக்களுக்கு மாளிகைகள் கட்டுவதிலுமே