பக்கம் எண் :

37
 
     தமிழகத்திலும் கன்னட நாட்டிலும் சமயப் பற்றுடையவர் இல்லங்களில்
காணப்படுவது போன்ற பூசை புரைகள் மொகஞ்சத ரோவிலுள்ள பெரும்பாலான
வீடுகளில் உள்ளன.
 
     பிள்ளைகளுக்குரிய விளையாட்டுப் பொருள்களில் இன்றும் காணத்தக்க ஒரு
புதுமை மொகஞ்சதரோவில் உள்ளது. கம்பில் கட்டப்பட்ட ஒரு கயிற்றின் மீது ஒரு
பறவை ஏறி இறங்கும் படியாகப் பொறி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
     வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்கள் பெரும்பாலும் களிமண்ணால்
செய்யப்பட்டுள்ளன. ஆனால் விழாக்காலங்களுக்குரிய அரும்பொருள்கள் சங்கினாலும்
வெண்கலத்தினாலும் செய்யப்பட்டவை. மரம், செம்பு ஆகியவைகளும் வழங்கப்பட்டன.
விலங்குகளில் யானை, ஒட்டகம், கழுதை, நாய்கள், ஆடுமாடுகள் ஆகியவையும், புலி,
கரடி, மான், மலையாடு, முயல், காண்டாமிருகம், ஆகியவையும், மயில், கிளி, கோழி,
புறா, பருந்து, பாம்பு, ஆமை ஆகியவையும், பதுமையின் வடிவிலும், முத்திரை
ஓவியங்களிலும் காணப்படுகின்றன. நாய்கள் சிந்துவெளியிலிருந்து ஏற்றுமதி
செய்யப்பட்டன.
 
     சங்கு, மயில், ஆனை என்ற மூன்றும் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்கும் இடையே
இருந்த வாணிகத் தொடர்புக்குச் சான்றுகள் ஆகும். அணிகலன்கள் தங்கம், வெள்ளி,
செம்பு, வெண்கலம், தந்தம், கண்ணாடி ஆகியவற்றால் செய்யப்பட்டன. சிந்துவெளித்
தங்கத்தில் சிறிது வெள்ளி கலந்திருப்பதால் அது கோலாரிலிருந்து சென்றதே என்று
அறிஞர் துணிந்துள்ளனர். சங்க இலக்கியங்களிலே தங்கம் விளையும் கோலார் பற்றிக்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிந்துவெளிக் காலத்திலிருந்தே அங்கே தங்கம் வெட்டி
எடுக்கப்பட்டதென்று இதனால் தெரியவருகிறது. சிந்துவெளியில் தங்க வெள்ளிக் கலவை,
வெள்ளீயம், காரீயம் ஆகியவையும் வழங்கின. செம்பு இரசபுதனத்திலிருந்தும்
பாரசீகத்திலிருந்தும் கிடைத்தன. இன்று செம்புடன் நூற்றுக்குப்