பக்கம் எண் :

7

 
     குமரி முனைக்குச் சற்றுத் தென்கிழக்கே ஈழத்தீவு அல்லது இலங்கை கிடக்கின்றது.
32 கி.மீ தொலைவே அகலமுள்ள பாம்பன் கால்வாய் ஈழத்தைத் தென்னாட்டிலிருந்து
பிரிக்கிறது. அதே சமயம் இராமேச்சுரம் மன்னார் முதலிய பல சிறிய தீவுகளும் மணல்
திட்டுக்களும் தென்னாட்டுடன் அதை இணைப்பவையாய் உள்ளன. தென்னாட்டுடன்
இலங்கை, நில இயலில் மட்டுமின்றி, வரலாற்றிலும் மிக நெருக்கமான தொடர்புடையது.
உண்மையில் அது தென்னாட்டின் ஒரு கடல்கடந்த பதிப்பேயாகும். அதன்
வடபகுதியில் தென்னாட்டு மொழிகளில் ஒன்றான பழந்தமிழும், தெற்கில் அதற்கு
இனமான சிங்களமொழியும் பேசப்படுகின்றன.
 
     தென்னாட்டின் மேல் கரையிலிருந்து தென்மேற்காக இலக்கத் தீவுகள்,
மினிக்காய்த் தீவுகள், மாலத்தீவுகள், மோரிசு ஆகிய தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன.
இவை இந்நாட்டை ஆப்பிரிக்காவுடன் தொடர்பு படுத்துகின்றன. இதுபோலவே கிழக்குக்
கரையின் கிழக்கேயும், தென்கிழக்கேயும் அந்தமான், நிக்கோபார் (நக்காவவரம்) ஆகிய
தீவுகள் இருக்கின்றன. இவை தென்னாட்டைப் பர்மாவுடனும், மலாயா, இந்துசீனா ஆகிய
நாடுகளுடனும் தொடர்புபடுத்த உதவுகின்றன. மலாயாவை அடுத்துள்ள கிழக்கிந்தியத்
தீவுக்கூட்டங்கள் இம்மாநிலத்தை ஆஸ்திரேலியாவுடனும் அமெரிக்காவுடனும் தொடர்பு
படுத்துகின்றன. இக்கடலகத் தொடர்புகள் பண்டைக் குமரிக் கண்டத் தொடர்பை
நினைவூட்டுவனவாகும்.
 
     பண்டைக் குமரிக்கண்டத் தொடர்புகள் நில இயல், மண்ணூல் சார்ந்த
தொடர்புகள் மட்டுமல்ல. இன்று இப்பரப்பு முழுவதிலும் தொழில், வாணிகம்
ஆகியவற்றின் காரணமாகத் தென்னாட்டுத் தமிழர் பரந்து குடிபுகுந்துள்ளனர். இது
இக்காலப் புதுத் தொடர்பு மட்டுமன்று. முற்காலங்களில் கலிங்கர் அதாவது தெலுங்கர்
இப்பகுதியில் குடியேறி யிருந்ததனாலேயே, இன்றும் தென்னாட்டினர் இப்பகுதிகளில்
'கிளிங்கு'கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகக் கரையிலும் தெலுங்கு நாட்டுக்