பக்கம் எண் :

73
 
பெருமுயற்சிகள் செய்தனர். சேரன் செங்குட்டுவன் கி.பி. 2-ம் நூற்றாண்டில்
கங்கைவெளி வரை படை நடத்தி, ஆந்திரப் பேரரசருடன் சேர்ந்து இம்முயற்சியில்
பெரு வெற்றிகள் கண்டான். ஆனால் அணை கடந்த வெள்ளம்போல், 3-ம்
நூற்றாண்டில் இந்த மக்கள் எழுச்சி பாய்ந்து வந்து பரந்தது.
 
     தென்னாட்டின் வடமேற்கில் இருந்த பல குடிகள் இக்குடியெழுச்சியால்
உந்தப்பட்டுத் தெற்கு நோக்கிப் புடை பெயர்ந்தனர். சேரநாடு வலிமைவாய்ந்த
பேரரசாயிருந்த வரை தண்டகக் காட்டிலுள்ள இவ்வெழுச்சி தடைபட்டிருந்தது.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இப்பகுதியிலடைந்த வெற்றியை நாம் முன்பு கண்டோம்.
ஆயினும் விரைவில் கன்னட நாட்டெல்லையிலிருந்த களப்பிரர் என்ற ஒரு
பண்படாக்குடி, தமிழகத்தின் மீதே சாய்ந்தது. இதனால் சேர சோழ நாடுகள்
நிலைகுலைந்தன. பாண்டி நாடும் திடுமென நிலை கவிழ்ந்தது. மீண்டும் பாண்டிய அரசு
தலை தூக்க இரண்டு மூன்று நூற்றாண்டுகள் ஆயின. சேர சோழ அரசுகள்
தலையெடுக்கவே இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாயின.
 
     ''அளப்பரிய அதிராசரை அகலநீக்கி, அகலிடத்தைக் களப்பிரன் என்னும்
கலியரசன் கைக்கொண்டான். என்பது வேள்விக் குடிச் செப்படுகள் தரும் வாசகம்.
இக்களப்பிரர் படையெடுப்பின் பயனாகப் பாண்டியர் மரபு மட்டுமன்றி, பண்டைத்
தமிழர் முச்சங்க வாழ்வும் முத்தமிழ் வாழ்வும் பழங்கதையாயின. ஈடும் எடுப்புமற்ற
பழந்தமிழரின் தூய தென்னாட்டுப் பண்பாடும், சமூக சமயவாழ்வும் பண்படா அயலினப்
பண்பாடுகளின் தாக்குதலால் தளர்ந்து நாளடைவில் அவற்றுடன் சரிசமமாகக் கலக்கத்
தொடங்கிற்று.
 
     வடக்கேயிருந்து வந்த குடிபெயர்ப்புக் குழப்பம் தென்னாட்டையும் சிறிது
பாதித்ததுபோலவே; வடக்கே அதனாலேற்பட்ட பண்பாட்டுக் குழப்பமும் தென்னாட்டின்
பண்பமைதியை ஓரளவு கலைத்தது. வேள்விக்குடிப்பட்டயம் களப்பிரர் புரளியையே