பக்கம் எண் :

     91
 
கேசரி மரபினர்
 
     வடகிழக்கில் கலிங்க நாட்டில் காரவேலனுக்குப் பின் ஒரு சில அரசர் பெயர்களே
நமக்குத் தெரியவருகின்றன. கலிங்கத்தின் வடபகுதியில் இன்றைய ஒரிசாவில் கேசரி
மரபினர் 10ம் நூற்றாண்டு வரை ஆண்டதாகக் கல்வெட்டு மரபு குறிக்கின்றது.
கி.பி.615-ல் கலிங்கரிடமிருந்து வேங்கி நாட்டைக் கீழைச் சாளுக்கியர் கைப்பற்றி
ஆண்டனர்.
 
கிழக்குக் கங்கர்
 
     கிழக்குக் கங்க மரபினர் இதன்பின் சிற்றரசராகவே இருந்தனர் என்று
கருதவேண்டும். ஆனால் ஏழாவது அரசனான மூன்றாம் காமர்ணவன் (877-897) தன்
ஆட்சித் தொடக்கத்திலிருந்து கலிங்க கங்க ஊழி ஒன்று தொடங்கினான். இதனால்
வடபகுதியிலேனும் அவன் தன்னாண்மை யுடையவனாயிருந்தான் என்று எண்ண
இடமுண்டு.
 
     தேவேந்திர வர்மன் அல்லது முதலாம் இராசராசன் 1070ல் அரசுகட்டில் ஏறினான்.
அவன் குலோத்துங்க சோழன் புதல்வி இராசசுந்திரியை மணந்துகொண்டான். இது
முதல் கீழைக்கங்க மரபு சோடகங்க மரபு என்று அழைக்கப் பெறுகிறது. முதல்
சோடகங்கனாகிய அனந்தவர்மன் சோடகங்கன் 1078 முதல் 1152 வரை 74 ஆண்டுகள்
ஆட்சி செய்தான்.
 
     சோடகங்கர் கலிங்கத்தின் வடபகுதியாகிய ஓரிசாவையும் வென்று ஆண்டனர்.
இவர்கள் தமிழகத்தில் சோழருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். தமிழுக்கும்
தமிழ்ப் புலவர்களுக்கும் அவர்கள் பேராதரவு செய்தனர் என்பதை அவர்கள்
கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
 
     இம்மரபினர் 1434 வரை ஆண்டனர். அதன்பின் ஆயர் குடியினனான
கபிலேந்திரனால் கஜபதி மரபு என்ற புது மரபு நிறுவப்பட்டது.