‘கபிலை’ என்பது குரால் (புகர்நிற ஆன்). ஆவைக் கட்டி நீரிறைக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. கவலை என்னும் தென்சொல்லை வடசொல்லாக்கவே, கபிலை என்னும் வட சொல்லை ஆண்டுள்ளனர் தமிழ்ப் பகைவர். கம் என்பதும் தென்சொல்லே. அம் = நீர். அம் - கம். இனி, கருமம் என்பதன் குறுக்கமான கம் என்னுஞ் சொல், முதல் தொழிலான பயிர்த்தொழிலைக் குறித்தது எனினுமாம். ஆல் - ஆலத்தி = வழிபாட்டிலும் கண்ணெச்சில் கழித்தலிலும், விளக்கு முத்து சோறு முதலியவற்றைச் சுற்றியெடுத்தல். “கூத்தும் ஆலத்தியுங் கண்டு” (சீவக. 2468, உரை). ஆலத்தி யெடுத்தல், ஆலத்தி சுற்றுதல், ஆலத்தி வழித்தல் என்பன உலக வழக்கு. “மரமதைக் கண்டுமாதர் மரமொடு மரமெடுத்தார்” (தனிப்பா. 2 ஆம் பாகம்). மரமொடு மரம் = ஆலத்தி. “வெறும்புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டுங் கையிலே” (ஈடு, 1 8 9). முத்தைத் தட்டில் வைத்துச் சுற்றுதல் முத்தாலத்தி. “முத்தா லத்திகொண் டெண்ணாயிர மடவார் சூழ” (தமிழ்நா. 240). சோற்றுருண்டையைத் சோற்றாலத்தி (அன்னாலத்தி). ஆலத்தி -வ. ஆரத்தி. ஆலத்தி - ஆலாத்தி. “ஆலாத்தி சுழற்ற லென்கோ” (சௌந்தரி. 103) ஆலத்தி - ஆளத்தி = மெலிவு, சமன், வலிவு என்னும் முந்நிலைகளிலும் இசை வட்டமிட்டுப் பாடுதல். “மகரத்தி னொற்றாற் சுருதி விரவும் பகருங் குறினெடில்பா ரித்து _ நிகரிலாத் தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி மன்னாவிச் சொல்லின் வகை.” “குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்து நின்றார்ந்த மந்நகரந் தவ்வொடு _ நன்றாக நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க ஆளத்தி யாமென் றறி” என்பன அடியார்க்குநல்லா ருரை மேற்கோள் (சிலப். 3:26). |