செக்கச் சிவத்தல் = மிகச் சிவத்தல். “விழியிணை செக்கச்சிவந்து’’ (திருப்பு. 126). செக்கம் - செக்கல் = 1. செவ்வந்தி. 2. அந்திமாலை. செக்கல் - செக்கர் = 1. சிவப்பு. “சுடுதீ விளக்கஞ் செல்சுடர்ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற’’ (புறம். 16). 2. செவ்வானம். “செக்கர்கொள் பொழுதினான்’’ (கலித். 126). செகு - செகில் = சிவப்பு. “செகிலேற்றின் சுடருக் குளைந்து’’ (திருவிருத். 69). செகில் - செகிள் = மீனின் சிவந்த மூச்சுறுப்பு (gills). செகிள் - செகிடு = அலகடி, கன்னம். செகிட்டைக் கட்டி யறைந்தான். (உ. வ.). செகிள் - செவிள் - செவிடு = செவியொட்டிய கன்னம். செய் - சேய் = 1. சிவப்பு. “சேயுற்ற கார்நீர் வரவு’’ (பரிபா. 11:114). 2. செவ்வாய் (பிங்.). 3. செந்நிற முருகன். “பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கை..... ........................ சேவலங் கொடியோன்’’ (குறுந். கட. வாழ்.) என்றது காண்க. 4. முருகனை யொத்த மறவன். “பாரதப்போர் செற்றானுங் கண்டாயிச்சேய்’’ (நள. 137). சேய் - சேயன் = செந்நிறத்தான். “வண்ணமு மாய னவனிவன் சேயன்’’ (தொல். உவ. 32, உரை). சேயன் - சேயான் = செந்நிறத்தான். சேயவன் = 1. செவ்வாய் (திவா.). 2. செந்நிற முருகன். “ஆறுமாமுகச் சேயவன்’’ (கந்தபு. தெய்வயா. 58). சேயோன் = 1. முருகன். “சேயோன் மேய மைவரை யுலகமும்’’ (தொல். அகத். 5). 2. சிவன். சேயது - சேய்து - சேது = 1. சிவப்பு (சூடா.). 2. சிவந்தது. சேது -கேது = சிவந்த சாயைக்கோள், the descending node (திவா.). ஒ.நோ : செம்பு - கெம்பு (க.). சீர்த்தி - கீர்த்தி (வ.). சேது - சேத்து = சிவப்பு (திவா.). “சேத்தகில் புழுகு சந்தம்’’ (பாரத. பதினான். 219). |