பக்கம் எண் :

122

இரண்டு நூறு மைல்கள் தாண்டி
     இருக்கும் கடலை நோக்கியே
அருமைத் தொண்டர் பலரும் சூழ
     ஐயன் நடந்து சென்றனர்.

தளர்ந்த வயதில் காந்தி யடிகள்
     தண்டிக் கிராமம் நோக்கியே
தளர்வு சிறிதும் இன்றி நடந்தார்,
     தடியை ஊன்றி ஊன்றியே.

அறுபத் தோரு வயதில் கூட
     அண்ணல் விரைந்து நடந்திடும்
அரிய காட்சி கண்டு மக்கள்
     அவரைத் தொடர்ந்து சென்றனர்.

தண்டி தன்னில் உப்புக் காய்ச்சித்
     தடையை காந்தி மீறவே,
எண்ணில் லாத தேசத் தொண்டர்
     இதுபோல் உப்புக் காய்ச்சினர்.

தடியால் அடித்துத் தொண்டர் தம்மைத்
     தாக்கி னார்கள் சேவகர்.
பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தும்
     பெரிதும் தொல்லை கொடுத்தனர்.