பக்கம் எண் :

130

கணவனே தெய்வம் என்றுதொழும்-அன்னை
     கஸ்தூரி பாயையும் கைதுசெய்தே
துணையாய் வைத்தனர் காந்தியுடன்-ஆனால்
     துக்கம் நிகழ்ந்ததே அச்சிறையில்!

சிறையினில் வாழ்ந்து வருகையிலே-பெருந்
     தியாகி கஸ்தூரி மறைந்தனராம்.
பொறுமை மிகவும் உடையவராம்-நல்ல
     பொன்போல் குணங்கள் நிறைந்தவராம்.

காந்தி மடியில் தலையைவைத்தே-அன்னை
     கஸ்தூரி பாயும் பிரிந்துவிட்டார்.
சாந்தி நிலவும் முகத்தினையே-கண்டு
     தாங்கொணா வேதனை காந்தியுற்றார்.

விளையாடும் தோழியாய் உதவவந்தார்-நாட்டின்
     விடுதலைப் போரிலும் உதவிநின்றார்.
எழுபத்தைந் தாவது வயதினிலும்-அவர்
     இணையில்லாத் துணையாய் இருந்துவந்தார்.

கண்களைக் காக்கும் இமைகளைப்போல்-மகான்
     காந்தியை என்றுமே காத்துவந்தார்.
அன்னை கஸ்தூரி மறைந்தசெய்தி-நாட்டை
     அளவில்லாத் துயரினில் ஆழ்த்தியதே.