பக்கம் எண் :

33

வெள்ளைக் காரர் போன பிறகு
     மெதுவாய் அந்த வாத்தியார்
கள்ளங் கபட மற்று நிற்கும்
     காந்தி தன்னை அழைத்தனர்.

“பக்க முள்ள பையன் அவனைப்
     பார்த்தே எழுது என்றுநான்
தக்க முறையில் சைகை செய்தும்
     சற்றும் உணர வில்லைநீ”

என்றே ஆசான் எடுத்துக்கூறி
     இடித்துக் காட்ட, காந்தியும்
ஒன்றும் வாயால் பேச வில்லை;
     உள்ளம் பேச லானது:

“பிறரைப் பார்த்தே எழுதி நல்ல
     பெயரெ டுக்கச் சொல்கிறார்.
தருமம் தானோ? இல்லை, இல்லை.
     தவறே ஆகும் அல்லவோ?”

என்று சிறுவர் காந்தி மனத்தில்
     எண்ணி நின்றார். ஆயினும்
என்றும் போல மதிப்புத் தந்தே
     ‘எங்கள் ஆசான்’ என்றனர்!