பக்கம் எண் :

57

விருந்து முடிந்ததும் நண்பர்களில்-சிலர்
     மெத்தவும் காந்தியை வாழ்த்தினரே.
இறுதியில் பையிலே கையைவிட்டு-காந்தி
     எடுத்தனர் நன்றி உரைதனையே.

காகிதம் தன்னை எடுத்ததுமே-அவர்
     கைகள் இரண்டும் நடுங்கினவே.
வேகமாய் வார்த்தைகள் வந்தனவா?-இல்லை;
     வேர்வை உடம்பை நனைத்ததுவே!

தொண்டை அடைத்தது; மேலும் அவர்-சொன்ன
     சொல்லும் உடைந்து சிதறியதே.
நன்றி உரைதனில் என்னசொன்னார்-என்றே
     நண்பரில் யாருக்கும் புரியவில்லை!

நண்பர்கள் மத்தியில் பேசிடவே-அன்று
     நடுங்கித் திணறிய காந்திமகான்
அந்நிய ரும்மிகப் போற்றிடவே-பல
     ஆயிரங் கூட்டத்தில் பேசிவிட்டார்!