விழுந்த சத்தம் கேட்டுக் கஸ்தூரிபாய் விழித்தார். ‘பூனைதான் தட்டைத் தள்ளியிருக்க வேண்டும்’ என்று நினைத்தார். ஆனால், எழுந்து பார்த்த போதுதான் விஷயம் தெரிந்தது. உடனே காந்திஜியைப் பார்த்து, ‘ஏன், நீங்கள் என்னை எழுப்பியிருக்கலாமே ! நான் என்ன, சோம்பேறியா? அல்லது, இந்தச் சிறு வேலையைக்கூடச் செய்ய முடியாதபடி கிழவியாகி விட்டேனா !’ என்று கேட்டார்.
“அப்படி ஒன்றும் இல்லை. தூங்கிக் கொண்டிருந்த உன்னை எழுப்பினால் தூக்கக் கலக்கத்தில் கோபித்துக்கொண்டு விடுவாயோ என்ற பயம் எனக்கு !” என்று கூறிவிட்டுக் காந்திஜி சிரித்தார்.
“பயமா ! உங்களுக்கா? அதுவும் என்னிடத்திலா?” என்று கஸ்தூரிபாயும் சிரித்துக்கொண்டே கூறிவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றார் ; மளமளவென்று வேலையைக் கவனித்தார். விரைவில் சமையல் முடிந்தது. விருந்தினரின் பசியும் பறந்தது. * * * தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு சமயம் கஸ்தூரிபாய்க்கு உடல் நலமில்லாதிருந்தது. படுத்த படுக்கையிலிருந்தார். எந்த மருந்து கொடுத்தும் பயனில்லை. ‘ஆபரேஷன் செய்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று டாக்டர் கூறியிருந்தார்.
எல்லோரும் பயந்தனர். “உடல் நிலை இவ்வளவு மோசமாயிருக்கிறதே ! இப்போது ஆபரேஷன் செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாதோ !” என்று சிலர் கூறினர். |