“ஒரு மன்னன் கொடுங்கோல் புரிந்தான். அதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தான், ஒரு வீரன் ; மன்னனின் அக்கிரமச் செயல்களைப் பகிரங்கமாக எடுத்துக் கூறினான். உடனே, அந்தக் கொடுங்கோல் அரசன் அந்த வீரனைப் பிடித்து வரும்படி உத்தரவிட்டான்.
“தன் முன்னால் வீரனைக் கொண்டுவந்து நிறுத்தியதும், அந்தக் கொடுங்கோலன் அவனை அங்கம் அங்கமாக வெட்டும்படி சொன்னான். அப்படியே செய்தார்கள். ஆனாலும் அந்த வீரன் கலங்கவில்லை. ‘கொடுங்கோலன்’, ‘கொடுங்கோலன்’ என்று கூறிக் கொண்டே அசையாமல் நின்றான். உடனே, அரசன் அவன் நாக்கையும் வெட்டி எறியும்படி உத்தரவிட்டான். அப்போதும், அவன் பயந்து நாவை அடக்கிக் கொண்டு இருந்துவிடவில்லை. நாக்கை வெட்டி எடுக்கும் வரை அவன் ‘கொடுங்கோலன்’, ‘கொடுங்கோலன்’ என்று கூறிக்கொண்டே இருந்தான்.”
“கொடுங்கோலை எதிர்த்த அந்த வீரனுக்குக் கிடைத்த தண்டனையை, இப்போது தாங்கள் கொடுக்கப் போகும் தண்டனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதை எவனாவது லட்சியம் செய்வானா?” என்று கேட்டார், ஆஸாத்.
கடைசியாக மாஜிஸ்ட்ரேட் ஆஸாத்துக்கு ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனை விதித்தார். உடனே, ஆஸாத் புன்முறுவலுடன், “நான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவல்லவா தண்டனை கொடுத்திருக்கிறீர்கள்?” என்றார்.
* * *
|