செல்ல அனுமதியுங்கள். நாளை மே மாதம் பிறக்கிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்குள் நான்திரும்பி வருகிறேன்” என்றான் பழனி. “பழனி நீ என்ன பேசுகிறாய்? நம் பள்ளியில் படிப்பதால்தானே நாகன் இப்படிச் சொல்கிறான். மதுரையில் எத்தனையோ பள்ளிகள் இருக்கின்றன. வேண்டுமானால் நீ வேறு ஒரு பள்ளியில் சேர்ந்துபடி” என்றார் சுந்தரேசர். “அதனால் என் இலட்சியம் நிறைவேறிவிடாது. அங்கும் நான் பணத்தைக் கொடுத்து முதல் மார்க்கு வாங்கியதாக நாகனே சொன்னாலும் சொல்லுவான். அப்பா, இளங்கோ இலக்கிய மன்றத் தலைவர் அன்று என்னைப் புகழ்ந்தாரே, நினைவிருக்கிறதா? அப்படிப்பட்ட பொய்ப்புகழைக் கண்டு, கேட்டு நான் அலுத்துவிட்டேன். எனக்கு உண்மையான புகழ் வேண்டும். அதை நானே என் திறமையால் பெற வேண்டும். இந்த லட்சியம் நிறைவேற ஒரு வருடம் என்னை எங்காவது போக விடுங்கள். நீங்கள் மறுத்தால், நான் உங்கள் அனுமதி பெறாமலே போகுமாறு நேர்ந்தாலும் நேரலாம்” என்றான் பழனி. அதுவரை பேசாமல் இருந்த அழகன் குறுக்கிட்டான். “பழனி, அப்பாவிடம் பேசும் பேச்சா இது? அனுமதி வேண்டுமானால் அதைச் சண்டை போட்டாவது பெறு. ஆனால் இப்படியெல்லாம் பேசாதே” என்றான். சுந்தரேசனின் கண்களில் நீர் துளிர்த்தது. “பழனி இது உன் அம்மாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது. அம்மாவைச் சம்மதிக்கச் செய்யும் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றான் பழனி. “அப்படியென்றால் நீ ஒரு வருடம் எங்களைப் பிரிந்திருக்க நான் அனுமதி அளித்துவிட்டேன் என்று முடிவு செய்துவிட்டாயா?” என்று ஏக்கத்தோடு கேட்டார், தந்தை. |