போனது. சென்னை வண்டிக்காகப் பழனி காத்திருந்தான். வந்ததும் அதில் எறிச் சென்னைக்குச் சென்றான். அதனால்தான் கோவை ரயில் நிலையத்தில் பழனியின் புகைப்படம் வைத்துக்கொண்டு தேடு தேடென்று தேடிய சுந்தரேசரின் நண்பர் கிருஷ்ணன் கண்களுக்குப் பழனி அகப்படவில்லை. பழனி சென்ற வண்டி சென்னை எழும்பூரை அடைந்தது. பழனி வண்டியிலிருந்து இறங்கினான். தன் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தான். வாயிலில் டிக்கெட் வாங்குபவர் நின்றார். அவன் தன் கால் சட்டைப் பையிலிருந்த பர்ஸை எடுத்தான். அதிலிருந்த டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் பர்ஸை கால்சட்டைப் பையில் திரும்பவும் வைத்துக் கொண்டான். பழனி ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தான். எதிரே பல ஓட்டல்கள் இருந்தன. பழனிக்கும் பசி. பர்ஸிலே அப்பா கொடுத்த பணம் இருந்தது. “அது அப்பாவின் பணம். இன்று முதல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். அப்பாவின் பணத்தால் சாப்பிடக்கூடாது” என்று நினைத்தான். ஐந்நூறு ரூபாயில் டிக்கெட் வாங்கியது போக மீதிப் பணம் இருந்தது. அதை என்ன செய்வது? அந்தப் பணம் தன்னைச் சோம்பேறி ஆக்கிவிடுமோ என்று அஞ்சினான். “சரி அதை ஏழைகளுக்குக் கொடுத்து விடுவோம். இப்போது நாம் எங்கே போவது?” என்று யோசித்து நின்றான். யாரோ ஒருவன் பழனியின் மீது மோதினான். “என்ன நைனா வழியிலே நிக்கறே! ஓரமா நில்லு” என்று சொல்லிவிட்டுப் போனான். பழனி, தான் நின்ற இடத்தைப் பார்த்தான். அவன் ஒரு ஓரமாகத்தான். நின்றிருந்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. “இதைக் காட்டிலும் ஓரமாக எங்கே நிற்பது?” என்று நினைத்துக் கொண்டான். அருகே ஒருவன் “பேப்பர் பேப்பர்” என்று கூவியவாறு புயல் வேகத்தில் திரிந்து பேப்பர் விற்றுக் கொண்டிருந்தான். |