பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்163

  80இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந்
துணிவறா உளனும் பணிகிலா உரனும்
உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின்
தினையள வேனும் சேரா தாகும்
ஒருகுணம் பிரபுத் துவமென யாரே
 85உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்?
மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன்
அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும்.
நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான்
என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம்
 90நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே.
ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும்.
குலகுரு கூறுதல் கொண்டில மென்னில்
நலமன் றென்றே நாடி யனுப்பினோம்.
நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்?
 95இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும்,
குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்!
இதுமாத் திரமன் றிறைவ! சேரன்
சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ
  என்றே யென்மனம் பதறும். ஏவுமுன்
 100உரைக்க உன்னினேன் எனினும் உன்றன்
திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன்.
ஜீவ: வெருவலை குடிலா! அரிதாம் நமது.
தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும்
போதலோ காணுதி, பொருநைத் துறைவன்
 105செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்!
விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத்
தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப்
பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.

(ஒற்றன் வர)


ஈறு இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை - அஞ்சாதே.பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.)

வரி 107 - 108. ‘தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது.