| 155 | சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! |
| 160 | மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் |
| 165 | சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! |
| 170 | வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை |
| 175 | எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. |
| 180 | ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே!(குடிலன் போக) |
மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.