பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்291

குடி: அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது
செயத்தகு வினையல ஆதலில் திருவுளம்
உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே.
 240இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச்
செவ்விதில் இதுவோ செய்தற் கரியது?
சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென
நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே!
ஜீவ: நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்;
 245பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்?
குடி: பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப
மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே?
அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய
பினையிலை கவலையும் பீதியும் பிறவும்.
 250உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென்.
கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்?
ஆதலால் முனிவர் ஓதிய படியே
அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே.
ஆனால் அறியா அரசகன் னியர்கள்
 255தேனார் தெரியல் சூடுமுன் இரவில்
தனிவழி யநியர்பால் தங்குதல்....?
ஜீவ: தவறே
குடி: முனிவரே ஆயினும், அநியரே. உலகம்
பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது.
ஜீவ: மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல்.
குடி:260அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே?
மனத்துள கவலை மாறுமோ? கவலை
முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும்.


பாங்கோ - தகுதியோ. குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்குமுன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு.