| 45 | அடைவதப் போதியாம் அறிவம். போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம் யார் இற வார்கள்? யார் அறி வார்கள்? முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்? அரச வமிசக் கிரமம் ஓரில் |
| 50 | இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில் இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே, மூட உலகம் மொழியும், யாரே நாடுவர் ஆதியை? நன்று நன்றிது! |
| 55 | தோடம்! - சுடு! சுடு! தீது நன்றென ஓதுவ வெல்லாம் அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம்; |
| 60 | மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க் கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய். அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில் இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்? |
| 65 | பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங் காக்கும் வகையுங் காண்போம்; சுவான சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான். பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே |
| 70 | உத்தம உபாயம். ஓகோ! சேவக! சித்தம் மெத்தக் களித்தோம் இந்த மணவுரை கேட்டென மன்னன் துணியப் பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக! |
| | (சேவகன் எழுந்துவர) |
| | இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல |
| 75 | என்றும் பெற்றிலம். இணையறு மாலை இந்தா! தந்தோம். இயம்பாய், வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. |
உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும். சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு - ஒப்பற்ற.