1.6 தொகுப்புரை

சொற்றொடர்களில் இடம் பெறும் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர், வினை, இடை, உரி என்பனவாகும்.  இச்சொற்களுக்கு இடையிலான பொருள்தொடர்பு, வேற்றுமைப் புணர்ச்சி, அல்வழிப் புணர்ச்சி என்னும் இருவகையில் அடங்கும்.

வேற்றுமையை ஆறாகவும் அல்வழியைப் பதினான்காகவும் குறிப்பிடுவர்.

சொற்றொடரில் சொற்கள் நிலைமொழி, வருமொழியாக நின்று பொருள் உணர்த்தும்.

சொற்றொடரில் நிலைமொழிக்கும் வருமொழிக்கும் பொருள் தொடர்பு பொருந்தி வருமானால் தழுவு தொடர் என்றும் பொருந்தவில்லை என்றால் தழாத் தொடர் என்றும் அழைக்கப்படும். வேற்றுமைத் தொடரும் அல்வழித் தொடரும் தழுவு தொடராகவும் தழாத் தொடராகவும் வரும்.

சொற்றொடரில் தொடர்கள் கருத்து முற்றுப்பெற்றும், முற்றுப்பெறாதும் வரும். கருத்து முற்றுப்பெற்ற தொடரை முற்றுத்தொடர் என்றும், முற்றுப்பெறாத் தொடரை எச்சத்தொடர் என்றும் குறிப்பிடுவர்.

சொற்றொடரின் பொருளுணர்விற்குக் காரணம் அவாய் நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்பனவாகும்.

முற்றுத்தொடர், வாக்கியம் எனப்படும். அது கருத்து அடிப்படையிலும், அமைப்பு அடிப்படையிலும், வினை அடிப்படையிலும் வகைப்படுத்தப்படும் என்பனவற்றை இப்பாடம் உணர்த்துகிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1) புணர்ச்சி என்றால் என்ன? (விடை)
2) வேற்றுமைப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை? (விடை)
3) அல்வழி எத்தனை வகைப்படும்? அவை யாவை? (விடை)
4) தழுவு தொடர் என்றால் என்ன? (விடை)
5) தழாத் தொடர் என்றால் என்ன? (விடை)
6) முற்றுத் தொடர் என்றால் என்ன? (விடை)
7) எச்சத் தொடர் என்றால் என்ன? (விடை)
8) பொருளுணர்விற்கு உரிய காரணங்கள் யாவை? (விடை)