2.9 தொகுப்புரை

இந்தப் பாடத்தில், தமிழ் முதல் எழுத்துகள் முப்பதில் அடங்கி இருக்கும் பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்பதை அறிந்து கொண்டீர்கள். தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகள் பிறப்பதற்கு இடம் கழுத்து என்றும், ஆனால் அந்த உயிர்எழுத்துகள் மூன்று வித முயற்சியினால் பிறக்கின்றன என்றும் சுட்டிக் காட்டின. அ, ஆ வாயைத் திறத்தலாலும், இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடிப்பகுதி சென்று பொருந்துவதாலும், உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகியவை இதழ்குவிதல் என்ற முயற்சியாலும் பிறக்கின்றன என்பதையும் கண்டோம். தொல்காப்பியமும் நன்னூலும் உயிர்எழுத்துகளின் பிறப்பிடம் பற்றிக் கூறிய கருத்துகளில் காணப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளைத் தொகுத்துக் கண்டோம். அதைப்போலவே உயிர்ஒலிகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகளை விளக்கும் இடத்து இந்த இரு இலக்கண நூல்களும் தெரிவித்த கருத்துகளின் ஒற்றுமையைப் பார்த்தோம். தமிழ் இலக்கண நூல்கள் உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தெரிவித்த கருத்துகளை மொழிநூலார் கருத்துகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு கண்டதில் மொழிநூல் அறிஞர்கள் உயிர்ஒலிகளைப் பகுத்த முறையிலேயே தமிழ் இலக்கண நூல்களும் தமிழ் உயிர்ஒலிகளைப் பகுத்துள்ளன என்பதைக் காண முடிந்தது. இது, தமிழ் இலக்கண நூல்கள், மொழியை, அறிவியல் நெறியோடு அணுகிய நுட்பத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகள் எத்தனை? அவை யாவை? விடை
2. ‘அ, ஆ’ ஆகிய இரண்டும் எவ்வாறு பிறக்கின்றன? விடை
3. இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் எவ்வாறு பிறக்கின்றன? விடை
4. உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகியவை எவ்வாறு பிறக்கின்றன? விடை
5. மொழி நூலார் கருத்துப்படி உயிர்ஒலிகள் எத்தனை? அவை யாவை? விடை
6. மொழிநூலார் பகுப்பின்படி தமிழ் உயிர்எழுத்துகளைப் பிரித்துக் காட்டுக. விடை
7. ஐ, ஒள ஆகிய இரண்டையும் மொழிநூலார் எவ்வாறு கருதுகின்றனர்? விடை
8. தொல்காப்பியம் ‘ஐ’காரம் குறித்துத் தெரிவிக்கும் கருத்துகள், மொழியியல் கருத்துகளோடு ஒத்துச் செல்வதை எடுத்துக்காட்டுக. விடை