3.1 லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
விதிகள்
லகர, ளகர மெய்களை ஈற்றிலே கொண்ட சொற்கள், வல்லினம்,
மெல்லினம், இடையினம் என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு
புணரும் முறையைப் பொது விதி கொண்டும், சிறப்பு விதி கொண்டும் நன்னூலார் விளக்குகிறார்.
மேலும் நெல், செல், கொல், சொல், இல் என்னும் லகர ஈற்றுச் சொற்கள் வல்லினத்தை
முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணரும் முறையைச் சிறப்பு விதிகள் கொண்டு விளக்குகிறார்.
அவற்றை ஈண்டுக் காண்போம்.
3.1.1 லகர, ளகர ஈற்றுப்
புணர்ச்சி – பொதுவிதி
லகர,ளகர மெய் ஈற்றுப் புணர்ச்சிக்குப் பொதுவிதியாக
நன்னூலார் நான்கனைக் குறிப்பிடுகிறார். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சான்றுடன்
காண்போம்.
- நிலைமொழி இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள், வேற்றுமைப் புணர்ச்சியில்,
வருமொழி முதலில் வல்லினம் (க, ச, த, ப) வந்தால் முறையே றகர மெய்யாகவும்,
டகர மெய்யாகவும் திரியும். அதாவது லகர மெய் றகர மெய்யாகவும், ளகரமெய் டகர
மெய்யாகவும் திரியும்.
சான்று:
கல் + கோயில் = கற்கோயில்
முள் + செடி = முட்செடி
(கற்கோயில் – கல்லால் ஆகிய கோயில். மூன்றாம் வேற்றுமைத் தொகை; முட்செடி
– முள்ளை உடைய செடி. இரண்டாம் வேற்றுமைத் தொகை)
- அல்வழிப் புணர்ச்சியில், வருமொழி முதலில் வல்லினம் வந்தால், லகர ளகர
மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிந்தும் வரும்; திரியாமல்
இயல்பாயும் வரும்.
சான்று:
கால் + பெரிது = காற்பெரிது, கால்பெரிது
முள் + சிறிது = முட்சிறிது, முள்சிறிது
(இவை அல்வழியில் எழுவாய்த் தொடர்)
இச்சான்றுகளில் ஒரே புணர்ச்சியில் லகரம் றகரமாய்த்
திரிந்தும், திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும், ளகரம் டகரமாய்த் திரிந்தும்,
திரியாமல் இயல்பாயும் வந்துள்ளதையும் காணலாம்.
- அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் மெல்லினம்
வந்தால் லகர மெய் னகர மெய்யாகவும், ளகர மெய் ணகர மெய்யாகவும் திரியும்.
சான்று:
கல் + மனம் |
= கன்மனம் |
|
அல்வழி |
வாள் + மாண்டது |
= வாண்மாண்டது |
(கன்மனம் – கல் போன்ற மனம். உவமைத் தொகை; வாண் மாண்டது –
வாள் மாட்சிமைப்பட்டது. எழுவாய்த்தொடர்)
தோல் + முரசு |
= தோன்முரசு |
|
வேற்றுமை |
முள் + மலர் |
= முண்மலர் |
(தோன்முரசு – தோலால் கட்டப்பட்ட முரசு. மூன்றாம் வேற்றுமைத் தொகை
; முண் மலர் – முள்ளை உடைய மலர். இரண்டாம் வேற்றுமைத் தொகை)
- அல்வழி, வேற்றுமை ஆகிய இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழி முதலில் இடையினம்
வந்தால் லகர, ளகர மெய்கள் இயல்பாகும்.
சான்று:
கொல் + யானை
|
= கொல்யானை |
|
அல்வழி |
கள் + வழிந்தது |
= கள்வழிந்தது |
(கொல் யானை – வினைத்தொகை; கள் வழிந்தது – எழுவாய்த் தொடர்)
வில் + வளைத்தான்
|
= வில் வளைத்தான் |
|
வேற்றுமை |
தோள் + வலிமை |
= தோள் வலிமை |
(வில் வளைத்தான் – வில்லை வளைத்தான். இரண்டாம் வேற்றுமைத் தொகை;
தோள் வலிமை – தோளினது வலிமை – ஆறாம் வேற்றுமைத் தொகை.)
லகர ளகர ஈற்றுப் புணர்ச்சிக்குரிய இந்நான்கு
பொதுவிதியையும் நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
லள வேற்றுமையில்
றடவும், அல்வழி
அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி
மேவின் னணவும், இடைவரின் இயல்பும்,
ஆகும் இருவழி யானும் என்ப (நன்னூல், 227)
(உறழ்வும் – ஒரே புணர்ச்சியில் லகர, ளகர மெய்கள் றகர, டகர மெய்களாகத்
திரிந்தும், திரியாமல் இயல்பாய் வருதலும் உண்டு; வலி – வல்லினம்;
மெலி – மெல்லினம்; மேவின் - வந்தால்; இடை – இடையினம்;
இருவழி – அல்வழி, வேற்றுமை)
3.1.2 லகர, ளகர ஈற்றுப்
புணர்ச்சி – சிறப்பு விதி
நன்னூலார் லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சிக்கு உரிய
சிறப்பு விதிகள் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.
தனிக்குறிலைச் சார்ந்த லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
அல்வழிப் புணர்ச்சியில், தனிக்குறிலின் பின்
நின்ற லகர, ளகர மெய்கள் வருமொழி முதலில் தகர மெய் வருமானால் முறையே றகர,
டகர மெய்களாகத் திரிவதோடு அல்லாமல் ஆய்தமாகவும் திரியும்.
குறில்வழி லளத்
தவ்வணையின் ஆய்தம்
ஆகவும் பெறும் அல்வழி யானே (நன்னூல், 228)
(தவ்வணையின் – த அணையின் ; அணையின்
– வருமானால்)
சான்று:
கல் + தீது = கற்றீது,
கஃறீது
முள் + தீது = முட்டீது, முஃடீது
இச்சான்றுகளில் வருமொழி முதலில் தகரமெய் வர,
தனிக்குறிலின் பின் நின்ற லகர ளகரமெய்கள் பொதுவிதிப்படி முறையே றகர, டகர
மெய்களாகத் திரிந்ததோடு மட்டும் அல்லாமல், ஆய்தமாகவும் திரிந்தன.
வருமொழி முதலில் உள்ள தகரம் லகரத்தை அடுத்து
வரும்போது றகரமாகவும், ளகரத்தை அடுத்து வரும்போது டகரமாகவும் திரிவதற்கு
விதி னல முன் றனவும் என்று தொடங்கும் நூற்பாவில் பின்னர்க்
கூறப்படும்.
தனிக்குறிலைச்
சாராத லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
தனிக்குறிலைச் சாராத லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி
பற்றி நன்னூலார் மூன்று சிறப்பு விதிகளைத் தருகிறார். கல், முள் போன்ற சொற்களில்
தனிக்குறிலைச் சார்ந்து லகர ளகர மெய்கள் ஈறாக வந்தன. வேல், வாள் போன்ற சொற்களில்
தனி நெட்டெழுத்தைச் சார்ந்தும், மரங்கள் போன்ற சொற்களில் பல எழுத்துகளை அடுத்தும்
ல, ள இரண்டும் ஈறாக வந்தன. இத்தகைய சொற்களின் இறுதியில் வரும் லகர ளகர மெய்களே
தனிக்குறிலைச் சாராத லகர ளகர மெய்கள் எனக் கூறப்படுகின்றன.
1. அல்வழிப் புணர்ச்சியில்
தனிக்குறிலைச் சார்ந்து வாராத லகர, ளகர மெய்கள், வருமொழியின் முதலில் வந்த
தகரம் திரிந்த பின்பு தாமும் கெடும். (லகரத்தின் முன் வரும் தகரம் றகரமாகவும்,
ளகரத்தின் முன்வரும் தகரம் டகரமாகவும் திரியும்.)
சான்று:
இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய்
றகர மெய்யாகத் திரிந்தபின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள லகரமெய் கெட்டது.
இச்சான்றில் வருமொழி முதலில் உள்ள தகரமெய்
டகரமெய்யாகத் திரிந்தபின்பு, நிலைமொழி இறுதியில் உள்ள ளகரமெய் கெட்டது.
2. அல்வழி, வேற்றுமை ஆகிய
இருவகைப் புணர்ச்சியிலும் வருமொழியில் முதலில் வந்த நகரமெய் திரிந்த பின்பு
நிலைமொழி இறுதியில் உள்ள லகர ளகர மெய்கள் கெடும். (லகரத்தின் முன் வரும்
நகரம் னகரமாகவும், ளகரத்தின் முன்வரும் நகரம் ணகரமாகவும் திரியும். இவ்வாறு
திரிவதற்கு விதி ‘னல முன் றனவும்’ என்ற நூற்பாவில் பின்னர்க் கூறப்படும்.)
சான்று:
அல்வழி
(வேள் – வேளிர் குலத் தலைவன்)
வேற்றுமை
(தோன்றல் என்பது ஒருவன் பெயர். தோன்றலினது
நன்மை, வேளினது நன்மை ஆறாம் வேற்றுமைத் தொகை)
இச்சான்றுகளில் லகரத்தை அடுத்து வந்த நகரம்
னகரமாகவும், ளகரத்தை அடுத்து வந்த நகரம் ணகரமாகவும் திரிந்த பின்பு, நிலைமொழி
இறுதியில் உள்ள லகர, ளகர மெய்கள் கெட்டன.
3. வருமொழி முதலில் வல்லின
மெய்கள் வந்தால் லகர ளகர மெய்கள் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாதலும், முறையே
றகரமெய்யாகவும், டகர மெய்யாகவும் திரிதலும் உண்டு; வேற்றுமைப் புணர்ச்சியில் திரியாமல்
இயல்பாதலும் உண்டு.
சான்று:
அல்வழி
கால் + கை = கால்கை (காலும் கையும்)
பொருள் + புகழ் = பொருள்புகழ் (பொருளும் புகழும்)
இவை உம்மைத் தொகை. இச்சான்றுகளில் வல்லினம்
வர அல்வழியில் லகர ளகர மெய்கள் இயல்பாயின.
வேல் + படை = வேற்படை (வேல்
ஆகிய படை)
வாள் + படை = வாட்படை (வாள் ஆகிய படை )
இவை இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இச்சான்றுகளில்
வல்லினம் வர அல்வழியில் லகர ளகர மெய்கள் முறையே றகர மெய்யாகவும், டகர மெய்யாகவும்
திரிந்தன.
வேற்றுமை
கால் + பிடித்தான் = கால் பிடித்தான்
(காலைப் பிடித்தான்)
வாள் + பிடித்தான் = வாள் பிடித்தான் (வாளைப் பிடித்தான்)
இவை இரண்டாம் வேற்றுமைத்தொகை. இச்சான்றுகளில்
வேற்றுமையில் வல்லினம் வர லகர ளகர மெய்கள் இயல்பாயின.
குறில் செறியா
லள அல்வழி வந்த
தகரம் திரிந்தபின் கேடும், ஈரிடத்தும்
வரும் நத் திரிந்தபின் மாய்வும், வலிவரின்
இயல்பும் திரிபும் ஆவன உள பிற (நூற்பா, 229)
இந்நூற்பாவின் இறுதியில் பிற எனக் கூறப்படுவது கொண்டு
பின்வருவனவற்றையும் கொள்ளவேண்டும்.
1. பொதுவிதிப்படி அல்வழியில்
லகர, ளகர மெய்கள் கல்சிறிது, கற்சிறிது,
முள்சிறிது, முட்சிறிது என உறழ்ந்தே வரவேண்டும்
எனக் கூறப்பட்டது. ஆனால்,
வில் + படை = விற்படை
எனப் பொதுவிதிப்படி உறழாது. லகரமெய் றகரமெய்யாகத்
திரிந்தது காணலாம்.
2. தனிக்குறிலைச் சாராத
ல, ள ஆகிய இரண்டும் அல்வழியில் இயல்பாகும் எனக் கூறப்பட்டது. சான்று: கால்கை,
பொருள்புகழ். ஆனால் தனிக்குறிலைச் சார்ந்த ல, ள ஆகிய இரண்டும்
அல்வழியில் இயல்பாக வருதலும் உண்டு.
சான்று:
கொல் + களிறு = கொல்களிறு
கொள் + பொருள் = கொள்பொருள்
இவை வினைத்தொகை.
3.1.3 நெல், செல், கொல், சொல் என்னும்
சொற்களுக்குச் சிறப்புவிதி
நெல், செல், கொல், சொல் என்னும் நான்கு சொற்களின்
இறுதியில் உள்ள லகரமெய் அல்வழிப் புணர்ச்சியில் பொதுவிதிப்படி உறழாது, வேற்றுமைப்
புணர்ச்சியைப் போல றகர மெய்யாகத் திரியும்.
நெல்லும் செல்லும்
கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகரம் ஆகும் (நன்னூல், 232)
(செல் – மேகம்; கொல் – கொல்லனது
தொழில்)
சான்று:
நெல் + சிறிது = நெற்சிறிது
செல் + கரிது = செற்கரிது
கொல் + கடிது = கொற்கடிது
சொல் + புதிது = சொற்புதிது
3.1.4 இல் என்னும் சொல்லுக்குச் சிறப்பு
விதி
இல் என்னும் சொல்லுக்கு வீடு, இன்மை (இல்லாமை)
எனப் பல பொருள் உண்டு. இங்கு இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்ற சொல்லினது
புணர்ச்சிக்குரிய சிறப்புவிதி பின்வருமாறு நன்னூலாரால் கூறப்படுகிறது.
1. இல் என்னும் சொல்லோடு
ஐகாரச் சாரியை வந்து சேர்ந்தால், வருமொழி வல்லினம் விகற்பமாகும். (அதாவது
மிக்கும், மிகாமல் இயல்பாயும் புணர்தல்)
சான்று:
இல் + பொருள் > இல் + ஐ +
பொருள் > இல்லை + பொருள்
= இல்லைப்பொருள், இல்லை பொருள்
2. இல் என்னும் சொல்லோடு
ஆகாரச் சாரியை வந்து சேர்ந்தால் வருமொழி வல்லினம் மிகும்.
சான்று :
இல் + பொருள் > இல் + ஆ +
பொருள் = இல்லாப் பொருள்
3. இல் என்னும் சொல்,
மேலே கூறிய ஐகாரச் சாரியையோ, ஆகாரச் சாரியையோ பெறாமல் வல்லினத்தோடு இயல்பாகப்
புணர்வதும் உண்டு.
சான்று:
இல் + பொருள் = இல்பொருள்
இல் என் இன்மைச்
சொற்கு ஐ அடைய
வன்மை விகற்பமும், ஆகா ரத்தோடு
வன்மை யாகலும், இயல்பும் ஆகும் (நன்னூல், 233)
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
முள் + செடி –
சேர்த்து எழுதுக. |
|
2. |
கற்கோயில் - பிரித்து
எழுதுக. |
|
3. |
முள் + சிறிது
– எவ்வெவ்வாறு புணரும்? |
|
4. |
கல் + மனம், முள்
+ மலர் – சேர்த்து எழுதுக. |
|
5. |
கல் + தீது, முள் + தீது –
இவை எவ்வெவ்வாறு புணரும்? |
|
6. |
வாடீது – பிரித்து எழுதுக. |
|
|