5.2 ஆண்பால் கூற்று - II

இப்பகுதியில் மானுடப் பெண் எனத் தெளிந்த ஆண்மகன் அவள் மீது கொண்ட காதலால் அடையும் துன்ப உணர்வுகள் பயந்தோர்ப் பழிச்சல், நலம் பாராட்டல், நயப்புற்றிரங்கல், புணரா இரக்கம், வெளிப்பட இரத்தல் ஆகிய துறைகளில் வெளிப்படுவது காட்டப்படுகிறது.

5.2.1 பயந்தோர்ப் பழிச்சல்

(அப்பெண்ணைப்) பெற்றோரை வாழ்த்துதல் என்பது பொருள். கொளு,

இவள்பயந்து எடுத்தோர் வாழியர் நெடிதுஎன
அவள்பயந் தோரை ஆனாது புகழ்ந்தன்று

என விளக்குகிறது. ‘இவளைப் பெற்றவர்கள் நீடுவாழ்வாராக எனப் பெற்றவர்களை வாழ்த்துதல்’ என்பது பொருள். ‘வளையல் சூடியும் பெருங்கூந்தலைக் கொண்டும் மயிலைப்போலவும் இருக்கும் இவ்வழகிய பெண், யானைகள் முழங்கும் மலைப்பகுதியில் நீராடி மகிழ்கிறாள்; இவளைப் பெற்றவர்கள் மண்ணுலகில் நீண்ட காலம் வாழ்வாராக’ என்பது வெண்பா தரும் விளக்கம்.

5.2.2 நலம் பாராட்டல்

(பெண்ணின்) அழகினைப் பாராட்டுதல் என்பது பொருள். கொளு இதனை,

அழிபடர் எவ்வம் கூர ஆயிழை
பழிதீர் நன்னலம் பாராட் டின்று

என்று விளக்குகிறது. ‘காதல் துயரம் மிகும்வண்ணம் பெண்ணின் அழகினைப் பாராட்டுதல்’ என்பது பொருள். வெண்பா, அழகினைப் பாராட்டும் பாங்கைப் புலப்படுத்துகிறது :

அம்மென் கிளவி கிளிபயில ஆயிழை
கொம்மை வரிமுலை கோங்(கு) அரும்ப - இம்மலை
நறும்பூஞ் சாரல் ஆங்கண்
குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே

‘அவளது இனிய குரலைக் கேட்டுக் கிளிகள் மொழி பேசிப் பழகுகின்றன; அவளுடைய மார்புகளைப் போலக் கோங்கு அரும்பை முகிழ்க்கிறது; அவளுடைய கண்களைப் போலக் குவளை மலரைச் சுனைகள் பூத்தன’ என்று அவள் அழகு இயற்கையழகையும் விஞ்சியதாக இருப்பதைத் தலைவன் நலம்பாராட்டலில் வெளிப்படுத்துகிறான்.

5.2.3 நயப்பு உற்று இரங்கல்

புணர்ச்சியை விரும்பி வருந்துதல் என்பது பொருள். கொளு இதனை,

கொய்தழை அல்குல் கூட்டம் வேண்டி
எய்துதல் அருமையின் இறப்பப் புகழ்ந்தன்று

என விளக்குகிறது. ‘தழையாடை அணிந்த பெண்ணுடன் கூடுதலை விரும்பி, அது நிறைவேறாது என்ற நிலையை எண்ணி அதன் காரணமான வருத்தத்தால் அவள் அழகை மிகவும் புகழ்தல்’ என்று பொருள்.

வெண்பா இதனை அழகுற உணர்த்துகிறது :

பெருமட நோக்கின் சிறுநுதல் செவ்வாய்க்
கருமழைக்கண் வெண்முறுவல் பேதை - திருமுலை
புல்லும் பொறியி லேன்உழை
நில்லா(து) ஓடும்என் நிறையில் நெஞ்சே

முரண்தொடையால் வெண்பா தலைவனின் துயரை விளக்குகிறது.

‘பெரிய கண்களின் மென்மையான பார்வையையும் சிறிய நெற்றியையும் கரிய குளிர்ந்த கண்களையும் சிவந்த இதழ்களையும் வெண்பற்களின் சிரிப்பையும் கொண்ட பேதையாகிய இவளின் அழகிய முலைகளைத் தழுவும் பேறு கிடைக்காத நிலையிலும் என்னுடைய உள்ளம் அவளிடத்தேயே ஓடுகின்றது’. இதில் பெரு, சிறு என்றும், செம்மை, கருமை, வெண்மை என்றும் முரண்தொடை அமைந்துள்ளது.

5.2.4 புணரா இரக்கம்

(அவளைக்) கூடாமையால் வந்த துன்பம் என்பது பொருள். கொளு இதனை,

உணரா எவ்வம் பெருக ஒளிஇழைப்
புணரா இரக்கமொடு புலம்புதர வைகின்று

என விளக்குகிறது. ‘சுடரும் அணிகளை அணிந்த இப்பெண்ணைத் தழுவ இயலவில்லை என்ற பிறர் அறிய இயலாத துன்பத்தோடு தலைவன் தனிமையில் இருத்தல்’ என்பது பொருள். வெண்பா ஆண்மகனின் கூற்றாக இத்துயர்நிலையை உணர்த்துகிறது: ‘மணம் மிக்க மாலையினையும் அழகிய வளையல்களையும் அணிந்த பெண்ணைத் தழுவுதல் கூடாமையால், பிறர் இகழக்கூடிய சூழல் உருவாகும் நிலையாலும் உள்ள வருத்தத்தாலும் என் உயிர் பாதுகாத்தற்கு அரியதாக இருக்கிறது’.

5.2.5 வெளிப்பட இரத்தல்

துன்பம் வெளிப்பட (காதலை) இரந்தது என்பது பொருள். இதனைக் கொளு,

அந்தழை அல்குல் அணிநலம் புணரா
வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று

என விளக்குகிறது. ‘அழகிய தழையாடையை அணிந்த அல்குலை உடையாளுடன் கூட இயலாத மிகுந்த வருத்தம் புலப்படக் காதலை இரத்தல்’ என்பது பொருள். வெண்பா, ஆண்கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது. ‘ஆரவாரத்தையுடைய கடலையும் தாண்டுமளவு பரந்த என் காதல் துயரம் பெருக, முட்போன்ற பற்களில் புன்சிரிப்பையும் வளையலையும் கொண்ட அவளிடம் இரக்க, அவள் ஏற்கவில்லை. எனவே, என்னுடைய உயிர் நீங்கும்’.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
‘கைக்கிளை’ என்ற தொடரை விளக்குக.
விடை
2.
‘ஐயம்’ என்ற துறைக்கான கொளு யாது?
விடை
3.
நலம்பாராட்டல் என்ற துறைக்கான வெண்பாவின் பொருள் யாது?
விடை
4.
நயப்பு உற்று இரங்கல் என்ற துறைக் கொளுவின் பொருள் யாது?
விடை
5.
வெளிப்பட இரத்தல் என்றால் என்ன?
விடை