தமிழகக் கட்டக்கலையின்
சிகரமாகத் திகழ்வது தஞ்சைப்
பெரியகோயில், இதைக்கட்டிய பெருமை முதல் இராசராச
சோழனைச்சாரும். தன் வீரத்தாலும் படைபலத்தாலும் வங்காள
தேசம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றவன்
முதலாம் இராசேந்திரசோழன். இவனது மகன் முதல் இராஜராஜனும்
தந்தையைப் போல் வீரம் வாய்ந்தவன். சாளுக்கியரின்
தலைநகரைக் கைப்பற்றிய பெருமை இவனுக்கு உண்டு, இத்தகைய
மன்னர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் சோழப் பேரரசின்
வரலாற்றுச் சிறப்புடைய மன்னர்களாகத் திகழ்ந்தனர்.
- முதல் இராசராசசோழன்
(கி.பி.985-1014)
உத்தமசோழரின் ஆட்சி கி.பி.985
- இல் நிறைவுற்ற பிறகு,
சுந்தரசோழரின் இரண்டாம் மகனான அருண்மொழி சோழப்
பேரரசனாக கி.பி.985-இல் முடிசூடிக் கொண்டார். அப்போது முதல்
கோராஜகேசரி இராஜராஜன் என அழைக்கப்பட்டார். பெரிய
பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவையார்
ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்த இராசராசன் ஆற்றல்
மிக்கவராய் விளங்கினார். சோழ இராஜ்யத்தின் பரப்பு இவரது
ஆட்சிக்காலத்தில் மிகவும் விரிவடைந்தது. காந்தளூர்ச்சாலை,
வேங்கைநாடு, தடிகைபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம்,
ஈழமண்டலம், இரட்டபாடி, ஏழரை இலக்கம் போன்ற
நாடுகளை எல்லாம் வென்று வீரம் மிக்கவராய் விளங்கினார். தானே
போர் மேற்சென்று கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும்,
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்யாச்ரனையும் வெற்றி
பெற்றவர். இவரது ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டின் வருவாய்
பெருகிற்று. தன் நாடு முழுவதையும் துல்லியமாக அளக்கச்
செய்து, நிலத்தின் தரங்களைப் பகுத்து, ஆவணப்படுத்தினார்.
இந்திய வரலாற்றிலேயே முறையான நில அளவை முறையை
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.
இவரது சாதனைகளுள் குறிப்பிடத்தக்கது
உலகப்புகழ் வாய்ந்த
தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்ததாகும். சிறந்த
சைவப்பற்றாளராக விளங்கியபோதும் எல்லாச் சமயங்களையும்
ஒரே நிலையில் மதித்த பண்புடன் திகழ்ந்தவர். கடாரத்து
அரசன் சூளாமணிவர்மனால் தொடங்கப்பெற்று, அவன் மகன்
விஜயோத்துங்கவர்மனால் நாகப்பட்டினத்தில் கட்டிமுடிக்கப்பெற்ற
புத்த விகாரத்திற்கு 'இராஜராஜப்பெரும்பள்ளி' என்று தன்பெயரைச்
சூட்டி மகிழ்ந்ததோடு அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் எனும்
ஊரையும் அளித்தார். தனது கல்வெட்டுச் சாசனங்களில்
மெய்க்கீர்த்தி எனும் புதிய அமைப்பை அறிமுகம் செய்து,
அதன்மூலம் மன்னர்களின் உண்மை வரலாற்று நிகழ்வுகளைப்
பதிவு பெறுமாறு செய்தார். இராஜராஜனின் ஆட்சி மாமன்னரின்
நேரடி ஆட்சி என்ற போதும், அது உண்மையிலேயே மக்களாட்சித்
தத்துவத்தை மலரச் செய்த ஒரு ஆட்சிமுறையே ஆகும். நிர்வாக
அமைப்பில் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு முக்கிய பங்கு
இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு இராஜேந்திரசோழன்
என்ற ஒரு மகனும், இரு மகள்களும் இருந்தனர்.
- முதலாம் இராஜேந்திரசோழன்
(கி.பி.1012-1044)
பூர்வதேசமும்
கங்கையும் கடாரமும் கொண்ட
கோப்பரகேசரிவர்மன் என்று
கல்வெட்டுகளால் புகழப்படும்
முதலாம் இராசராசசோழனின் மறைவுக்கு ஈராண்டுகள் முன்பு
கி.பி.1012இல் இளவரசாகப் பட்டம் புனைந்து, பின்பு
மாமன்னனின் மறைவுக்குப் பிறகு
1014இல் சோழ
சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இராஜேந்திரன்
முடிசூடிக்கொண்டான். இவனது ஆட்சியின் முதற்பத்தாண்டுகள்
தஞ்சையைத்
தலைநகராகக் கொண்டிருந்தது. கொள்ளிடத்திற்கு
வடபால் கங்கைகொண்ட
சோழபுரம் எனும் பெயரில் ஒரு புதிய
தலைநகரை இப்பேரரசன் உருவாக்கினான். பின்பு ஏறத்தாழ
1024இல் தஞ்சையை விடுத்து, கங்கை கொண்டசோழபுரத்தையே
நிரந்தரத்
தலைநகரமாக்கினான்.
மாபெரும் வீரனாகத் திகழ்ந்த
இப்பேரரசன் தன் படை
பலத்தால் வங்காள தேசம் வரை படை எடுத்து
வெற்றிக்கொடி நாட்டினான். கங்கையிலிருந்து கொணர்ந்த நீரினைத்
தன் தலைநகரத்தில் வெட்டுவித்த 'சோழகங்கம்' எனும் ஏரியில்
நிரப்பி வெற்றிவிழா எடுத்தான். சிறந்ததொரு கடற்படையின்
துணைகொண்டு கீழ்த்திசை நாடுகளுள் ஒன்றான கடாரத்து
அரசனாகிய சங்கிராமவிசயோத் துங்கவர்மனைப் போரில் வெற்றி
கண்டு, அவனது பட்டத்து யானையையும், பெரும் பொருளையும்
வித்யாதர தோரணத்தையும் கவர்ந்ததோடு, ஸ்ரீவிசயம் (சுமத்ரா
தீவிலுள்ள பாலம்பாங்பகுதி), பண்ணை (சுமத்ரா தீவிலுள்ள
பனை), மலையூர் (சுமத்திராவின் மற்றொரு பகுதி), மாயிருடிங்கம்
(மலேசியாவிலுள்ள ஜிலோடிங்), இலங்காசோகம் (மலேயாவிலுள்ள
கெடா பகுதி), பப்பாளம் (கிரா பகுதியிலுள்ள இஸ்துமஸ்),
இலம்பகம், வளைப்பந்தூர், தக்கோலம் (தகோபா), தாமலிங்கம்
(மலேயா நாட்டிலுள்ள தெமிலிங்), இலாமுரிதேசம் (சுமத்திராவின்
வடபகுதி), நக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகிய நாடுகளை
வெற்றிகொண்டதாக இராஜேந்திரசோழனின் கல்வெட்டுகள்
கூறுகின்றன. பிற்காலச் சோழ அரசர்களுள் இராஜேந்திரசோழன்
காலத்தில்தான் சோழசாம்ராஜ்யம் மிகவும் விரிவடைந்திருந்தது.
தான் புதிதாகத் தோற்றுவித்த
கங்கைகொண்ட சோழபுரம்
எனும் தலைநகரில் கங்கைகொண்ட சோழேச்சரம் எனும்
மிகப்பெரிய சிவாலயத்தைக் கட்டி, சைவ சமயத்திற்கும்
கலைத்துறைக்கும் மிகுந்த சேவை புரிந்தான். புறச்சமயத்தவரிடம்
அன்பு காட்டினான் என்பதை அவனது கல்வெட்டுச்சாசனங்கள்
எடுத்துக்கூறுகின்றன. இவனது மகன்களான இராஜாதிராஜன்,
இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் தம்
தந்தையின் வெற்றிகளுக்குக் காரணமாகத் திகழ்ந்ததோடு,
இப்பேரரசனின் மறைவுக்குப் பின்பு ஒருவர்பின் ஒருவராக
ஆட்சிப்பொறுப்பை ஏற்றுச் சோழர் மரபிற்குப் புகழ் சேர்த்தனர்.
• முதல் இராஜாதிராஜன் (கி.பி.1018-1054) |
கங்கைகொண்ட சோழனான முதல் இராஜேந்திரசோழனின்
மூத்த மகனான முதல் இராசாதிராசன் தன் தந்தை பேரரசனாகத்
திகழும்போதே, கி.பி.1018இல் இராசகேசரி என்ற பட்டத்தோடு
இளவரசனாக முடிசூடிக்கொண்டான். தன் தந்தையின் ஆட்சிக்கு
உறுதுணையாக விளங்கிய இவன், கங்கை கொண்ட சோழனின்
மறைவிற்குப் பிறகு கி.பி.1044இல் சோழப் பேரரசனாக
முடிசூடிக்கொண்டான். பாண்டிமண்டலம், ஈழநாடு முதலியவற்றை
வெற்றிகண்ட இராசாதிராசன் மேலைசாளுக்கிய நாட்டிற்குப்
பலமுறை போர்மேற்சென்று வாகை சூடினான்.
சாளுக்கியர்களின் தலைநகரான
கல்யாணபுரத்தைக் கைப்பற்றி
அங்கிருந்து வெற்றிச்சின்னமாகக் கொணர்ந்த துவாரபாலகர் சிலை
ஒன்றைச் சோழ நாட்டில் காட்சியாக வைத்து, அதன் பீடத்தில் தன்
வெற்றிச் செய்தியைக் கல்வெட்டாகவும் பொறித்தான். கி.பி.1054-இல்
தன்தம்பி இரண்டாம் இராஜேந்திரனுடன் மீண்டும் மேலைச்
சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்தான். கிருஷ்ணையாற்றங்
கரையிலுள்ள கொப்பம் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன்
ஆகவமல்லன் என்பானுடன் கடுமையாகப் போர் புரியும்போது
வீரமரணம் அடைந்தான். பட்டத்து யானை மீது அமர்ந்து போர்
புரியும்போது இறந்ததால் யானைமேற்துஞ்சினதேவர் என்று
வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டான். எனினும் அப்போரில்
இவரது தம்பி இரண்டாம் இராஜேந்திரன் கடும் போர்புரிந்து
வெற்றிவாகை சூடினான்.
• இரண்டாம் இராசேந்திரசோழன்
(கி.பி.1051-1063) |
கங்கைகொண்ட இராசேந்திரசோழனின்
இரண்டாம் மகனான
இரண்டாம் இராசேந்திரசோழன் தன் தமையன் இராசாதிராசன்
கொப்பத்துப் போரில் கி.பி.1054இல் யானைமீது இறந்தபோது,
அப்போர்க்களத்திலேயே சோழசாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாக
முடிசூடிக்கொண்டான் என்பதை இவனது கல்வெட்டுகள் எடுத்துக்
கூறுகின்றன. இதனை, கலிங்கத்துப்பரணி,
'ஒரு களிற்றின்மேல் வருகளிற்றையொத் (து)
உலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருகளத்திலே முடிகவித்தவன்'
என்று கூறுகின்றது. இவ்வேந்தன்
கொப்பத்துப் போரில் ஆயிரம்
களிறுகளை (யானைகளை)க் கைப்பற்றியவன் என்பதை,
'வெப்பத் தடுகளத்து வேழங்கள் ஆயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும்'
என்று கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் மூவருலாவில்
குறிப்பிட்டுள்ளார். இவன் ஈழநாட்டை வென்றதோடு,
மேலைச்சாளுக்கியரோடு இரண்டாம் முறை முடக்காற்றூரில் போர்
தொடுத்து வென்றவன்.
• வீரராசேந்திரன் (கி.பி.1063-1070)
கங்கைகொண்ட இராசேந்திரசோழனின்
மூன்றாம் புதல்வனாகிய
வீரராசேந்திரன் தன் தமையன் இரண்டாம் இராசேந்திரசோழனின்
மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசனாக இராசகேசரி என்ற
பட்டத்துடன் முடிசூடிக்கொண்டான். இவன் கூடலசங்கம் எனும்
இடத்தில் மேலைச்சாளுக்கியருடன் போர் புரிந்து வெற்றி
கண்டவனாவான். தன் உடன்பிறந்தவர்களைப் போன்றே
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி
செய்தான். கி.பி.1070இல் இப்பெருவேந்தன் மரணமுற்றதால் உடன்
அவனது புதல்வன் அதிராஜேந்திரன் சோழப் பேரரசனாக, பரகேசரி
எனும் பட்டம் புனைந்து ஆட்சிபீடம் அமர்ந்தான். அதே ஆண்டில்
உடல்நலக் குறைவால் மரணமுற்றான். விஜயாலயசோழன்
காலத்திலிருந்து தொடர்ந்த தந்தைவழி அரச உரிமை மரபு
இந்நிலையில் நிறைவு பெற்றது.