4.1 சித்தர்கள்

    செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற
    சித்தர் பிறந்த தமிழ்நாடு

    எனச் சித்தர்களின் பெருமையைப் பாராட்டுகின்றார் பாரதியார். சித்தர்கள் மரண பயத்தை வென்றவர்கள் ஆவர். இவர்களால் எதையும் சாதிக்க முடியும். நீரினுள் இருப்பர், நெருப்பினுள் அமர்வர், கூடு விட்டுக் கூடு பாய்வர், அந்தரத்தே (வான்வழியே) செல்லக் கூடியவர்கள். சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்துபவர்கள். ஆன்மிகம் தழைக்கவும், மக்களின் ஆரோக்கியம் செழிக்கவும், சித்தர்கள் முக்கியப் பங்காற்றியவர்கள். அவர்கள் தத்துவ நெறியிலும், மருத்துவத் துறையிலும் மிகுதியான பல நூல்களைச் செய்துள்ளனர். இவர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள். கடவுளுக்குச் சமமாய்ப் போற்றி வணங்கப்பட்டனர்.

    சித்தர் என்ற சொல் சித்தியில் இருந்து வந்தது. ஆன்மிகத்திலும்,     அறிவியல் சாதனைகளிலும் முழுமையுற்ற நிலைதான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர். இவர்களைச் சமய, சமுதாயத்தின் ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்றும் அறிவியலின் முன்னோடிகள் என்றும் கூறுவர்.

4.1.1 உலகளாவிய வரவுக்கு வித்துகள் - சித்தர்கள்

    சித்தர்கள் பாடல்களின் கருத்துகள் , நாடு, மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து சென்று உலகமெங்கும் பரவும் ஆற்றல் உடையவை. உலகப் பழக்க வழக்கங்கள், சாதி சமயப் பிரிவுகள், செல்வம், செல்வாக்கு, மாயையினால் துய்க்கப் பெறும் உலக இன்பங்கள், பட்டம், பதவி, புகழ் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டவர்கள் சித்தர்கள். உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானவர்கள். அவர்கள் எங்கும் எப்போதும் தோன்றி, மக்கள் இன்புற்று வாழ நல்வழி காட்டுபவர்கள். ஆன்ம நேய ஒருமைப்பாட்டை - எம்மதமும் சம்மதம் என்ற சமரச சன்மார்க்கத்தை - வளர்ப்பவர்கள்.

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

என்பதே அவர்களின் குறிக்கோள்.

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்

என்பதே அவர்களின்     சமயக் கோட்பாடு. எல்லோரும் இன்புற்றிருக்க     நினைக்கக்     கூடியவர்கள்.     இத்தகைய சிறப்புக்குரியவர்கள்     உலகமெங்கும் உள்ளனர். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியவர்கள் ஆவர்.

    சித்தர்கள் பலர் தம் இயற்பெயரை இழந்து, வாழ்ந்த இடத்தின் பெயரால் (பட்டினத்தார், கொங்கணர், இடைக்காடர், கருவூரார் என்ற வகையில்) அழைக்கப்பட்டனர். பாடிய பாடல் வகை, சொல்லாட்சி முதலியவற்றால் சிறப்புப் பெயரையும் (அகப்பேய்ச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் என்பது போல்) பெற்றுள்ளனர்.

4.1.2 சித்தர்களின் காலம்

    தமிழகத்தில் சித்தர் பலர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தே வாழ்ந்திருந்தாலும், முதலில் அகத்தியர் பின் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமூலர். இவரே தமிழ்ச் சித்தர் பரம்பரையின் தலைவராக விளங்குகின்றார். அவருக்குப்பின் காலந்தோறும் சித்தர்கள் பலர் ஆங்காங்கே தோன்றிப் பாடல்கள் பல இயற்றியுள்ளனர்.

4.1.3 பதினெண் சித்தர்கள்

    பதினெண் சித்தர்கள் என்று கூறுவது பழமையான வழக்காகும். ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. பதினெட்டு என்னும் எண்ணிக்கையோடு சித்தர் பட்டியல்கள் பல உள்ளன. இதில் எது சரியானது என்று தீர்மானிக்க முடியவில்லை. எடுத்துக்காட்டாக, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Lexicon) தரும் பட்டியல் திருமூலர், இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டி, சட்டைமுனி, சுந்தரானந்த தேவர், குதம்பைச் சித்தர், கோரக்கர் என்ற பதினெட்டுச் சித்த புருஷர்கள்.” நவநாத சித்தர்கள் என்று மற்றொரு குழுவினரும் உண்டு. காலப்போக்கில் மேலும் பலர் சேர்க்கப்பட்டு, இன்று எண்ணிலடங்காச் சித்தர்கள் உள்ளனர். சான்றாகச் சிவவாக்கியர், வாலைச்சாமி, பட்டினத்தார், இராமலிங்க அடிகள், மச்சமுனி முதலான பலர். இங்கு, பெருவழக்கில் உள்ள பதினெண் சித்தர்களைப் பற்றிக் காணலாம்.

பதினெண் சித்தர்கள் :

  1. நந்தீசர்
  2. அகத்தியர்
  3. திருமூலர்
  4. புண்ணாக்கீசர்
  5. புலத்தியர்
  6. பூனைக்கண்ணர்
  7. போகர்
  8. கருவூரார்
  9. கொங்கணவர்
  10. காலாங்கி நாதர்
  11. பாம்பாட்டிச் சித்தர்
  12. தேரையர்
  13. குதம்பைச் சித்தர்
  14. இடைக்காடர்
  15. சட்டை முனி
  16. அழுகண் சித்தர் (அழுகுணிச் சித்தர் என்றும் குறிப்பிடுவர்.)
  17. அகப்பேய்ச் சித்தர்
  18. தன்வந்திரி
  • நந்தீசர்
  •     நந்தீசர கயிலாய பரம்பரையைச் சார்ந்தவர். சிவகணங்களில் ஒருவரான நந்தீசர், கயிலாயத்தின் காவலர் எனப் புராணங்கள் கூறும். சித்தர்கள் மரபு தோன்றுவதற்கு இவர் காரணமானவர். இவர் திருமூலர், பதஞ்சலி, வியாக்ரமர், சிவயோகி ஆகியோர்க்கு உபதேசம் செய்து சித்தர் மரபு தோன்றக் காரணமாக விளங்கியவர். அகத்தியர், போகர் போன்றோர் நந்தீசரைத் தம் பாடல்களில் குறிக்கின்றனர். வைத்திய, யோக, ஞானக் கலைகளில் சிறந்து விளங்கி, தாம் இயற்றிய நூல்களைத் தமது மாணாக்கர்கள் மூலம் உலகெங்கும் பரவும்படி செய்தார்.

  • அகத்தியர்
  •     அகத்தியர் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சமய, சமுதாயத் தொண்டாற்றியதிலும் முன்னோடியாகத் திகழ்பவர் ஆவார். அகத்தியர் என்னும் பெயரில் தமிழுலகில் மட்டும் ஏறத்தாழ 37 அகத்தியர்கள் இருந்துள்ளதாகத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மூலமாக அறிய முடிகின்றது. தமிழ் இலக்கணத்தில் முதன்முதலில் ஐந்திலக்கணங்களையும் தொகுத்து அகத்தியம் என்னும் நூலைத் தந்தவர்; வாதாபி, வில்வலன் என்னும் இரு அரக்கர்களை அழித்தவர்; விந்திய மலையின் கர்வத்தை அடக்கியவர் எனப் பல கதைகள் இவரைப் பற்றிப் பேசப்படுகின்றன. இவர் முருகப் பெருமானிடம் இருந்து ஞான உபதேசம் பெற்றவர். இவரைக் கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ் முனி, குட முனி என்று பல பெயர்களால் சிறப்பித்துக் கூறுவர். அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் புலஸ்தியர், தேரையர், தொல்காப்பியர் குறிப்பிடத்தக்கவர்கள். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியர் இவருடைய மாணவர்களில் ஒருவர் என்றும் கூறுவார்கள்.

        அகத்தியரிடம் இருந்தே ஒரு சித்தர் மரபு தொடங்கியது எனலாம். அகத்தியர் மருத்துவம், ஞானம், நாடி சாஸ்திரம், சோதிடம், யோகம், மந்திரம் போன்ற பல துறைகளில் பல நூல்களைப் படைத்துள்ளார் என்பர்.

    • அகத்தியர் பரிபூரணம்
    • ஞான காவியம்
    • வாத காவியம் 1000
    • வைத்திய காவியம் 1500

    என்பன போன்ற பல நூல்கள் இவர் பெயரில் கிடைக்கின்றன.

  • திருமூலர்
  •     இவர் கைலாய பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர் மரபில் இவரே முதல் சித்தர் எனக் கருதப்படுகின்றார். கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது திருவாவடுதுறையில் பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர்.

    நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169)

    என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவர் நெடுங்காலம்     தவத்தில் இருந்து ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடினார் என்பர்.

        இவர் காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு. இவர் சீடர்களில் காலாங்கியும், கஞ்சமலைச் சித்தரும் இன்றியமையாதவர்கள். இவரது சமாதி சிதம்பரத்தில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், போகர் என்னும் சித்தர்.

        திருமூலர்     இயற்றியவை : திருமந்திரம், வைத்தியம் ஆயிரம், கருக்கிடை வைத்தியம் 600, பெருங்காவியம் 1600 என்பனவாகும். திருமந்திரம், யோகத்தின் படிநிலைகளையும், சித்தாந்த வேதாந்தக் கருத்துகள், மந்திர, தந்திர முறைகளையும் விளக்கியமைக்கிறது. திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றி, திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் திருவந்தாதி, சதுரகிரித் தலபுராணம் போன்ற நூல்கள் குறிப்பிடும்.

  • புண்ணாக்கீசர்
  •     காயகல்பம் உண்டு, அதிக ஆண்டுகள் இருந்து, பல சித்துக்களைச் செய்தவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் சீடர் என்பர். இவர் கேரளத்தில் உள்ள நாங்குணாசேரி என்ற ஊரில் சமாதி பெற்றார் என்பதாகப் போகர் கூறுகிறார்.

    மூப்பு, சுண்ண செய்நீர், ஞானப்பால், மெய்ஞ்ஞானம், யோகப் பாடல போன்றன இவர் நூல்களாம். இவரது சீடர் மச்ச முனி.

  • புலஸ்தியர்
  •     அகத்தியரின் முதல் மாணாக்கராக விளங்கியவர். இவர் சிவராச யோகி என்ற பெயரும் பெற்றவர். புலம் என்றால் தவம். இவர் தவத்தினால் புகழ் பெற்றவர் ஆதலால் இப்பெயர் பெற்றார் என அபிதான சிந்தாமணி நூல் குறிப்பிடுவதன் மூலம் உணரலாம். இவரே முதலில் புராணங்களை வெளிப்படுத்தியவர் என்பர்.

        இவரது சமாதி, பொதிகை மலைச்சாரலில் பாபநாசத்தில் இருப்பதாகக் கூறுவர்.

    இவர் இயற்றிய நூல்கள் :

    • வைத்திய வாதம் 1000
    • வாத சூத்திரம் 300
    • கற்ப சூத்திரம் 300
    • ஞான சூத்திரம்
    • வைத்திய 100
    • வாதம் 100
    • உழலைச் சுருக்கம் 13

    என்பனவாம்.

  • பூனைக்கண்ணர்
  •     கண்களின் நிறம் மாறுபட்டிருந்ததால் பூனைக்கண்ணன் என்றழைக்கப்பட்டார் என்பர். இவர் எகிப்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வைத்திய யோக ஞான சாஸ்திரங்களைக் கற்று, பின்பு எகிப்து நாட்டிற்குச் சென்று அறப்பணிகளைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய செய்திகள் அதிகமாகக் கிடைக்கவில்லை.

  • போகர்
  •     இவர் காலாங்கி நாதரின் சீடராவார். இவர் தமிழ்நாட்டில் பிறந்து பிறகு சீனதேசத்தில் பல காலம் வாழ்ந்து, பிறகு மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்பி வந்து     பழநியில் வசித்தவர். சீனத்திலிருந்து திரும்பும்போது இவருடன் வந்த சித்தரே புலிப்பாணி ஆவார்.

        சீனத்தில் இவர் போ-யாங் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இப்பெயரே போயர் என்றழைக்கப்பட்டு, பின்னர் போகர் என மருவியிருக்கலாம். இவர் சிங்கம், பூனை, பசுவிற்கு உபதேசம் தந்தவர் என்ற கதைகளும் வழங்கப்படுகின்றது. இவருடைய வாழ்க்கைக் குறிப்புகளைப் போகர் ஏழாயிரத்தில் போகரே (தன்னைப் பற்றிப்) பல இடங்களில் குறித்துள்ளார்.

        கொங்கணவர், சட்டை முனி, இடைக்காடர், கருவூரார், சுந்தரானந்தர், மச்சமுனி, புலிப்பாணி, கமலமுனி போன்றோர் இவருக்குச் சீடராக விளங்கியவர்கள். பழநியில் உள்ள தண்டபாணி சிலையை நவபாஷாணக் கட்டால் அமைத்துக் கோயிலில் பிரதிஷ்டை செய்தவர் போகரே. போகரின் சமாதி இன்றும் பழநியில் தண்டபாணி சந்நிதிக்குப் பின்புறம் உள்ளது. இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டு என்றும், ஒரு சிலர் ஐந்தாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

    • நூல்கள் :

        போகர் ஏழாயிரம், போகர் 12000, சப்த காண்டம், நிகண்டு, ஜெனன சாகரம், கற்ப சூத்திரம், வைத்திய சூத்திரம், முப்பு சூத்திரம், ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், பூஜா விதி, கற்பம் 360, இரண வாகடம் 100 முதலான பல்வேறு நூல்களையும் இயற்றியவர்.

        மூலிகைகளின் வேர், தண்டு, இலை, பூ, கால், கொட்டை இவைகளின் தனித் தன்மைகளைத் தனித் தனியாக ஆராய்ந்து, வேதியியல் பண்புகளை விரித்து, போகர் நிகண்டு, போகர் கற்பம் 300 போன்ற நூல்கள் அமைகின்றன.

        பல சித்தர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பும், வாழ்க்கை நிகழ்வுகளும் பற்றிப் பேசும் போகர் ஏழாயிரம் பல சித்தர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வழி வகுக்கின்றது.

  • கருவூரார்
  •     கொங்கு மண்டலத்தில் கருவூரில் பிறந்தவர். அதனாலேயே கருவூர்த் தேவர் என அழைக்கப்பட்டார். கொங்கு மண்டல சதகம் என்னும் நூலில் கொங்கு நாட்டில் வாழ்ந்த சித்தர்களின் வரிசையில் இவரைப் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் கருவூரான் சித்தர், கருவூரனார் தேவர் என்னும் பெயரில் இருவர் இடம் பெறுகின்றனர். ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருவிசைப்பா பாடல்களையும், சித்தர் பாடல்களையும் ஒப்ப வைத்து நோக்கினால் இருவரும் ஒருவர் அல்லர், வெவ்வேறானர் என்பதை அறியலாம். நெல்லைத் தலபுராணம், கருவூர்த் தலபுராணங்களில் இவர் பற்றிய செய்திகளை அறியலாம். கருவூர்த் தலபுராணம் இவரை அகத்தியரோடு இணைத்துக் கூறுகிறது.     எனினும்     பல அகத்தியர்கள் இருந்ததாக எண்ணப்படுவதால் இவரின் காலத்தை அறிவது கடினமே.

        செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும், இவரது பெற்றோர் ஊர் ஊராகச் சென்று கோயில்களில் பஞ்சலோகச் சிலைகளை அமைக்கும் தொழிலினை மேற்கொண்டனர் என்றும் ‘அகத்தியர் தமது 12000 என்னும் பெருநூல் காவியம் என்ற நூலில் குறிப்பிடுகின்றார். தஞ்சையில் சோழ மன்னன் பெரிய ஆலயம் ஒன்றினை உருவாக்க எண்ணினான். பல அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிலைகள், தூண்கள் உருவாக்கிய சிற்பிகளால் சிவலிங்கத்தை உருவாக்க முடியாமல் போனது. இதனை அறிந்த போகர், காகத்தின் காலில் ஓலை கட்டியனுப்பிக் கருவூராரைத் தஞ்சைக்கு வரவழைத்தார். கருவூரார் வந்து சிவலிங்கத்தை நிறுத்தச் செய்தார் என, கொங்கணவர் வாத காவியம் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றது. தஞ்சை ஆலயத்தில் கருவூரார்சிலை இன்றும் உள்ளது. கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் 500, யோக ஞானம் 500, பல திரட்டு, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், பூஜா விதி, கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்றவை இவர் இயற்றிய நூல்களாம். இவர் திருக்காளத்தியில் சமாதியடைந்து அருள்புரிந்து வருவதாகக் கூறுவர்.

  • கொங்கணவர்
  •     மேலைக் கடற்கரை     கொங்கண தேசத்தவர் . வேட்டுவ குலத்தில் பிறந்தவர். போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந்திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்பலானது . பிறகு,     நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந் தாழ்த்தி அன்னமளித்தார். சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர்.

        கொங்கணவர், அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார்.

        போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணவர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது. கொங்கணவரின் முக்காண்டங்கள், வைத்தியம் 200, வாதசூத்திரம் 200, ஞான சைதன்யம், வாலைக்கும்மி, சரக்கு வைப்பு, முப்பு சூத்திரம், ஞான வெண்பா, உற்பத்தி ஞானம், சுத்த ஞானம் குறிப்பிடத்தக்கதாகும். இவர் சுமார் 24 நூல்கள் இயற்றியுள்ளார்.

  • காலாங்கி நாதர்
  •     வளோள மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய வகாரத் திரவியம், வைத்திய காவியம், ஞான சாராம்சம அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஞன பூஜா விதி, இந்திர ஜால ஞானம், ஞான சூத்திரம், உபதேச ஞானம், தண்டகம் போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர்.

  • அகப்பேய்ச் சித்தர்
  •     மனத்தைப் பேய் என உருவகித்துப் பாடியதால் அகப்பேய்ச் சித்தர் எனப் பெயர் பெற்றிருக்கலாம். அகம்+பேய்+சித்தர் = மனமாகிய பேயை வென்று சித்தியடைந்தவரென இவருக்குக் காரணப் பெயராக அமைந்துள்ளது. அகப்பேய்ச் சித்தர் நாயனார் சாதியைச் சேர்ந்தவர். துணி வணிகஞ் செய்து பிழைத்து வந்தார் என்று போக முனிவர் கூறுகின்றார்.

        வேட்டி, புடவை முதலான துணிமணிகளை வீடு வீடாகச் சென்று விற்கும்போது எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்திருப்பார். அவர்களின் ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள் அவர் மனத்தைத் தொட்டன. மனிதன் துன்பம் இல்லாமல் வாழ முடியாதா? இரவு பகலாகச் சிந்தித்தார். அவ்வாறு பாதிக்கப் படுகிறவர்கள் ஏதாவது விமோசனம் காண வேண்டும் என்று நினைத்தார். தம் மனத்தை அடக்கிட நினைத்தார். அப்போது ஏ! என் அகமே! ஆசையால் ஆடுகிறாய்; ஆணவத்தால் ஆடுகிறாய் ; பாசத்தால் ஆடுகிறாய் ; வேஷத்தால் ஆடுகிறாய் இப்படிப் பேயாட்டம் ஆடுகிறாயே ! அடங்கிக் கிடக்க மாட்டாயா? என்று குமுறுகிறார்.

        நஞ்சுண்ண வேண்டாமே - அகப்பேய்
        நாயகன் தாள் பெறவே     
    நெஞ்சம் அலையாதே - அகப்பேய்
        நீ ஒன்றும் சொல்லாதே.

        என்று பாடி, மனம் பேய் போன்று அலைவதைத் தடுத்து நிலைநிறுத்தி விடு என்று அறிவுரை கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர். இவரது நூல்களுள் வாத வைத்தியம், யோக ஞானப் பாடல்கள் பரிபாஷைகளைப் பெற்று, கடினமானதாக அமைகின்றன. (பரிபாஷை :ஒவ்வொரு துறையிலும் அதற்கே உரிய கலைச்சொற்கள் உண்டு. அவற்றைப் பரிபாஷை என்று குறிப்பிடுவார்கள்.) மேலும் அகப்பேய்ச் சித்தர் பாடல் 90, பூரண ஞானம் 15 என்ற நூல்கள் யோக ஞான சாஸ்திரத் திட்டு ஏழாம் பாகத்தில் (தாமரை வெளியீடு) உள்ளன. அகப்பேய்ச் சித்தர் திருவையாற்றில் சித்தியடைந்தார் என்பர்.

  • பாம்பாட்டிச் சித்தர்
  •     தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்த சித்தர்களில் இவரும் ஒருவர். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்து வேடிக்கை காட்டுவதே இவர் தொழில். எவ்வளவு பெரிய பாம்பானாலும் சரி ! எவ்வளவு கொடிய நாகமானாலும் சரி. பிடித்துவிடுவார். அவற்றின் விஷத்தைக் கக்க வைத்துச் சாதாரணமான தண்ணீர்ப் பாம்பு போல் ஆக்கிவிடுவார்.     விஷத்தை முறிக்கும் மூலிகைகளையெல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்தார். விஷ வைத்திய ஆராய்ச்சியாளர் என்றே அவரைக் கூறலாம். மருத மலையில் விஷ வைத்திய ஆய்வுக் கூடமே நடத்தினார்.

        ஒரு நாள் மலைமேல் பெரிய நவரத்தினப் பாம்பைக் கண்டு, அதைப்     பிடிப்பதற்கு     விரைந்தார். பாம்பைப் பிடிக்கப் போகும்போது, சட்டைமுனியைக் கண்டார்.     சட்டைமுனி, பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தார். காடுகளில் பாம்புகளைப் பிடித்து நாடு நகரில் சென்று அவற்றை ஆட்டிக் கொண்டு, பிழைத்துக் கொண்டிருந்த பாம்பாட்டி ஞானப்பால் உண்டு நானிலம் மெச்சும் சித்தராகி விட்டார்.

        நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில் பாம்பாட்டிச் சித்தரைப் பற்றிக் கூறிய கருத்தினைக் காணலாம்.

  • “இவர் திருக்கோகர்ணத்தைத் தமக்குச் சன்மஸ்தானமாக (பிறந்தவூர்) உடைய ஒரு சித்தர், இவர் காலம் நன்கு புலப்படாததாயினும் சமீப காலத்தவர் என்பது எளிதில் துணியப்படும். இவர் ஆடு பாம்பே எழுந்தாடு பாம்பே என்று     பாம்பை     முன்னிலைப்படுத்திப்     பாடல் பாடியுள்ளமையால் இவருக்குப் பாம்பாட்டிச் சித்தர் என்றும் பெயர் வழங்கி வருகிறது.
  • இவர் பாடல், கூத்தர் பாடல் போல் வெள்ளையாயிருப்பினும், தத்துவார்த்தங்களின் மேலதாகிய அற்புத ஞானக் கருத்தை உட்கொண்டிருக்கும். இவர் பாம்பு என்று கூறுவது பாம்புருவாக மண்டலமிட்டுக் கிடக்கும் குண்டலினி சக்தியை. அதை எழுப்புதல்     யோகிகளுக்கு அவசியமாகும். அதனால் எழுப்புவாராயினார்”.
  •     பாம்பாட்டிச் சித்தர் ஜோகி என்னும் வகுப்பைச் சார்ந்தவர். இவரின் சமாதி மருதமலையில் இருக்கின்றதாகக் கூறுவர்.

        இவர் செய்த நூல்கள் :

    பாம்பாட்டிச் சித்தர் பாடல், சித்தராரூடம், சில வைத்திய நூல்கள் முதலியனவாம்.

  • தேரையர்
  •     அகத்தியருடைய மாணாக்கர்களில் ஒருவராக விளங்கியவர் தேரையர் ஆவார். இவர் மருத்துவ ஞானம் மிகுந்தவர். சித்த வைத்திய முறையில் தேரையர் கண்ட உண்மைகள் பெரிதும் உபயோகமாகின்றன. மனிதரின் தேக உணர்வையும், குரலின் தன்மையையும் வைத்தே நோய் நிர்ணயம் செய்து விடும் திறமை பெற்றவர். அவ்வண்ணமே சிகிச்சை முறைகளிலும் இவருக்கு அதிக வல்லமை இருந்தது.     இவர் பதினாறு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் வைத்திய காவியம், இரசவர்க்கம், கருக்கிடை, வைத்திய சிந்தாமணி, மருத்துவ பாரதம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். மேலும் பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நூல், நெய்க்குறி நூல், தயில வர்க்க சர்க்கம், சிகிச்சை ஆயிரம், யமக வெண்பா, நாடிக் கொத்து, நோயின் சாரம் முதலிய நூல்களும் பல உள.

  • குதம்பைச் சித்தர்
  •     பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்குபவர் குதம்பைச் சித்தர். இவர் தம் பாடல்களில் காதில் அணியும் அணிகலன்களுள் ஒன்றான குதம்பையை முன்னிலைப் படுத்தி, ‘குதம்பாய்’ என்று பாடியதால்தான் குதம்பைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். குதம்பைச் சித்தரின் 246 கண்ணிகளும், 246 முத்துக்களும் மாணிக்கங்களாகும். ஓர் எழுத்துக்கு ஒரு கோடி என்று கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாத ரத்தினங்கள் என்று சமய உலகம் போற்றிப் பாராட்டுகிறது. இவர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாகக் கூறுவர். சித்தர் ஞானக் கோவையில் உள்ள 32 பாடல்கள் தவிர, யோக ஞான சாத்திரத் திரட்டில் இவரது பாடல்கள் காணப்படுகின்றன. இவரது பாடல்கள் புரட்சிகரமானவை. சாதி, சமயம், இனம், மதம் இவற்றைச் சாடி, மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டும் வகையில் அமைந்தன என்பதனைக் கீழ்வரும் பாடல் வரி உணர்த்துவதனைக் காணலாம்.     சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்று
         ஓதி யுணர்ந்தறிவாய் - குதம்பாய்
         ஓதி உணர்ந்தறிவாய். (145)

        உலகப் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து அழியாத மெய்ப் பொருளை உணர்ந்த ஞானிகள் புறச் சடங்குகளில் ஈடுபட மாட்டார்கள். யோக நெறி, பக்தி நெறி, புறப் பூசை ஆகிய அனைத்தையும் கடந்த மலோன நிலையை அடைந்த அவர், கீழ்ப்பட்ட நிலைகள் தேவையில்லை எனப் பாடுகின்றார்.

        நித்திரை கெட்டு நினைவோடு இருப்பார்க்கு  
        முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்   
       முத்திரை ஏதுக்கடி.

        உள்ளத் துறவே துறவு ; புறத்துறவு துறவன்று என்பது இவர் கொள்கையாகும்.

    • இடைக்காடர்

         தாம் திமி திமி தந்தக் கோனாரே   
       தீம் திமி திமி திந்தக் கோனாரே   
       ஆனந்தக் கோனாரே - அருள்    
      ஆனந்தக் கோனாரே.

        நாட்டுப்புறப் பாடல்களில் திருவிழாக் காலங்களில் இன்றும் இப்பாடல்களைப் பாடி, ஆடிக்கொண்டு, ஒயிலாட்டம் முதலான கூத்துக்களை ஆடுபவர்களைக் காணலாம். அந்த அளவுக்குச் சித்தர் நெறியையும், சமய உணர்வையும் ஆழப்பதிக்கும் பாடல்களில் இடைக்காடர் பாடல்களையும் சேர்க்கலாம். எளிய சொற்கள், ஆழமான கருத்துகள், இனிய சந்தங்கள் இவையே இடைக்காடரின் தனிச் சிறப்புகள் எனலாம். குறிப்பாக, இவர் பாடல்களில் கோனே, கோனாரே, தாண்டவக் கோனே என்னும் சொற்கள் அமையப் பாடுதல் இவர் இயல்பாகும். மனம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் காரணம். ஆசை, அழுக்காறு (பொறாமை), வெகுளி (சினம்) முதலான குற்றங்கள் தோன்றும் இடம் மனம். இது அடங்கப் பெற்றால் ஆன்மா முக்தி பெறும் என்பது இவரது கருத்தாகும். இதனை எளிய முறையில் உணர்த்துகிறார்.

    மனமென்னும் மாடடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
     வாய்த்தது என்றெண்ணடா தாண்டவக்கோனே
     சினமென்னும் பாம்பிறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
    சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே.

        ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடருக்கு உபதேசம் செய்தவர் போகரே எனக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

        இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக, போகர், தம் ஜனன சாகரத்தில் கூறியுள்ளார்.

  • சட்டை முனி
  •     தமிழ்நாட்டுச் சேணிய வகுப்பைச் சார்ந்தவர். கயிலாயம் சென்று சிவபெருமானைச் சேவித்து வருபவர். எப்போதும் கம்பளத்தில் மலோடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். சுந்தரானந்தர் இவரிடம் சில சாத்திரங்கள் கேட்டறிந்ததுண்டு. இவர் சரக்கு வைப்பு, நவரத்தின வைப்புகளில் தேர்ந்தவர். நிகண்டு, வாத காவியம், சரக்கு வைப்பு, நவரத்தின வைப்பு, வகாரம் தீட்சை, ஞான விளக்கம உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.     சட்டை முனி நெசவுத் தொழிலைச் செய்து வந்தார். தமிழைக் கற்றார். ஞானம் கொண்டார். சதுரகிரி சென்று சேர்ந்தார். வாதம் புரிந்து அநேக வேதியியல் விந்தைகள் செய்தார். பின் வேறு ஒருவரின் தேகத்தில் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார். கற்ப மூலிகைகளை உண்டார். காயசித்தி செய்து கொண்டு அதிலேயே வாழ்ந்தார் என்றும் கருவூரார் கூறுகிறார்.

        தமிழர் கண்ட வேதியியல் விந்தைகளைத் தரணியில் உள்ளோர்க்கு எடுத்துக் காட்ட , சட்டைமுனியின் வாத காவியம் ஒன்றே போதுமானது. இதிலுள்ள வேதியியல் விந்தைகளை, விவரிக்க முடியாத அதிசயங்களை, அற்புதங்களைக் காட்ட முயல்வதும், மிகவும் அரிய செயலாகும்.

        சட்டைமுனி இரசவாதம் என்ற நூலில் பாதரசத்தை மணியாக்கி, அதற்கு உலோகங்கள் இரத்தினங்கள், உபரசங்கள் எல்லாவற்றினுடைய சத்துக்களையும் கொடுத்து, அவற்றை உயிருள்ள இரசமணிகளாக்கும் விதத்தையும் கூறுகின்றார்.

        சட்டை முனி, திருவரங்கத்தில் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார்; இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

  • அழுகண் சித்தர்
  •     தாடியும் முடியுமாக அந்த மனிதர் நடந்து கொண்டிருப்பார். அவர் கண்களிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும். அவரை அங்கே பார்த்தேன், இவ்விடத்தில் பார்த்தேன் என்பார்கள். ஆனால் எங்கும் தங்க மாட்டார். முடிவில்லாத வழிப்பயணத்தில் போய்க் கொண்டே இருப்பார். யார் எது கேட்டாலும், பதில் கூறவும் மாட்டார். அவர் கண்கள் மட்டும் அழுது கொண்டே இருக்கும். இதனாலேயே இச்சித்தருக்கு அழுகண் சித்தர் என்று வழங்கினர். காலப்போக்கில் அழுகண்ணர் என்றும் அழுகணிச் சித்தர் என்றும் அழுகுணிச் சித்தர் என்றும் வழங்கினர் என்பதும் தெரிய வருகிறது.

        இச்சித்தர் ஊரைப் பார்த்து அழுதார். உலகைப் பார்த்து அழுதார், தன்னையே பார்த்தும் அழுதார்.

         பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து   
       மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்  
        மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்   
       பையூரும் மெய்யூரும் என் கண்ணம்மா.          
        - பாழாய் முடியாதோ.

    என்று பாடுகின்றார்.

        இப்பாடலில் ‘கண்ணம்மா’ என விளித்துப் பாடுவது இறைவனை. பிற்காலத்தில் வந்த பாரதியாரின் கண்ணன் பாட்டு இதன் அடிப்படையில் தோன்றுகின்றது.

        வேதாந்தக் கருத்துகள், வைத்தியம், யோகம், ஞானம் முதலான பல நிலைகளில் பாடியுள்ளார். அழுகண் சித்தர் பாடல் 200, ஞான சூத்திரம் 23 ஆகிய இரண்டு நூல்கள் அவருடைய படைப்புகளாகும்.

        நாகப்பட்டினத்தில் உள்ள     சிவபெருமான் கோயில் வளாகத்திலேயே அழுகண் சித்தர் சமாதியும் உள்ளது.

  • தன்வந்திரி
  •     முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம்.
         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    சித்தர்களின் குறிக்கோள் யாது?
    2.
    சித்தர் பாடல்கள் எந்த இலக்கிய வகையைச் சார்ந்தவை?
    3.
    சித்தர்களைத் தமிழ்ச் சமய உலகம் எவ்வாறு பாராட்டுகிறது?
    4.
    நான்கு சித்தர்களின் பெயர்களைக் கூறுக.
    5.
    திருமூலர் பாடிய நூல் யாது?
    6.
    அகப்பேய்ச் சித்தர் என்றழைக்கக் காரணம் என்ன?
    7.
    சித்தர்கள் கண்ட உண்மைகள் சிலவற்றினைக் கூறுக.
    8.
    அழுகண் சித்தர் என்று பெயர்வரக் காரணம் என்ன?