v
அச்சொற்களும் சொற்றொடர்களுமாகிய பொற்றுகள் பொறுக்கிச் சேர்க்கப்பட்டு, நல்லிசைப் புலவன் நன்மதிக்குகையில் உருகிச் செய்யுள் எனும் அச்சிலே வார்க்கப்பட்டு, அளக்கலாகா அழகு மிக்க யாப்பென்னும் பொற்பாவையாய் எழுந்து நின்று விளங்கிக் காண்பார்க்கும் கேட்பார்க்கும் எல்லாம் அழியா இன்பத்தைப் பொழியா நிற்கும்’ என்று யாப்பருங்கலத்தைப் பதிப்பித்த பவானந்தம்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையின் கருத்து யாப்பின் சிறப்பை உணர்த்தவல்லது.
தொல்காப்பியம் வெண்பா, அகவல்பா, கலிப்பா, வஞ்சிப்பா, பரிபாடல், மருட்பா முதலிய பாக்களைப் பற்றியும் பா இனங்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தமிழ் மொழியில் பாவும், பாவினங்களின் வளர்ச்சியும் பெருகின. வளரும் எந்த மொழியிலும் இந்தப் போக்கைக் காணலாம். கவிஞர் தம் உணர்ச்சியைக் கவிதையாகப் பாடும் பொழுது யாப்பு இலக்கண எல்லையை மீறல் இயல்பாக அமையும். அங்ஙனம் பிறந்தவையே புதிய பாக்களும் பாவினங்களும் ஆகும். மேலும் பிற மொழிச் செல்வாக்கினாலும் புதிய யாப்பு வடிவங்கள் தமிழில் நுழைந்தன.
பிற்காலத்தில் தோன்றிய இலக்கண நூலார் அவ்வாறு தோன்றிய ‘பா’விற்கும் பாவினங்களுக்கும் இலக்கணங்கள் எழுதினர். அவற்றுள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை எனும் இரு நூல்கள் சிறந்த நூல்களாகப் போற்றப்படுகின்றன. யாப்பருங்கலத்தை ஒட்டி உருவாக்கப்பட்டது யாப்பருங்கலக் காரிகை. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரு நூல்களையும் அமுதசாகரர் இயற்றினார். இவர் பெயர் ‘அமிர்தசாகரனார்’ என்றும் ‘அமிதசாகரனார்’ என்றும் வழங்கப்பெறுகிறது. அமுதசாகரன்என்றும்அமிதசாகரன்என்றும்கல்வெட்டு