vii
உரையாசிரியர் 90க்கும் மேற்பட்ட நூல்களைத் தம்முடைய உரையில் சுட்டியுள்ளார். தமிழ் யாப்பிலக்கணப் பரப்பை உணர்வதற்கும் இவ்வுரை துணைசெய்கிறது. மேலும் உரையாசிரியர், நூற்பாக்களுக்கு எடுத்துக் காட்டுகின்ற பாடல்கள் 1000க்கும் மேற்பட்டவை. இவருடைய உரையிலிருந்து ‘மேற்கோள் நூற்பா அகர வரிசை’ என்ற தனித்த நூலைப்பதிப்பதற்கு ஏற்ற வகையில் விரித்துரை சிறந்து விளங்குகிறது. எனவே ‘சொல்லிற் சுருங்கிப் பொருள் பெருகித் தொல்ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும் நல் யாப்பருங்கலம்’ என்று இந்நூல் புகழப்பட்டது.
யாப்பருங்கலம் விரிவாக அமைந்திருந்ததால் மக்களிடம் அந்நூல் செல்வாக்குப் பெறவில்லை. அதற்கு மாறாக யாப்பருங்கலக்காரிகை சுருக்கமாக அமைந்திருந்ததால் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. எனவே யாப்பருங்கலச் சுவடியைப் படி எடுப்போர் அரிதாயினர். கிடைத்த படிகளிலும் பிழைகள் மலிந்து காணப்பட்டன.
பதிப்புச் செம்மல் பவானந்தம் பிள்ளை தமக்குக் கிடைத்த சுவடிகளின் துணையைக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ எனும் நூலை 1916இல் முதல் பாகமாக (உறுப்பியல்) வெளியிட்டார். யாப்பருங்கலத்தை முதன் முதலில் தமிழ் உலகுக்குக் கொண்டுவந்த பெருமை பவானந்தம் பிள்ளை அவர்களைச் சாரும்.
‘ஆங்கில மொழியின் அறிவிருந்தாலே தாங்கள் உயர்ந்தவர்.தமிழுக்குத்  தாம்செய்யும் தொண்டு பெரிதென்று’ சொல்லித்திரிவோர் மத்தியில் பவானந்தத்தின் பணி போற்றத்தக்கது. ‘சொல்லும் செயலும் ஒழுக்கத்திணைய மெல்லிதழ் முறுவல் முகத்தில் மிதக்கப் புதுமையில் பழுத்தவன்; புதுமையில் மலர்ந்தவன்; புலமையில் சீர்த்த தெளிவு பெற்றவன்; இலக்கியம்