xLv

 தாங்கினான்’ என்னும் பாட்டும், ‘கூதிர்’ என்புழி, ‘கூதிர்கொண்டிருள் தூங்கும்’ என்னும் பாட்டும், ‘பண்பு’ என்புழி, ‘பண்புகொள் செயன்மாலை’ என்னும் பாட்டும், ‘தோழி’ என்புழி ‘தோழிவாழி தோழிவாழி வேழமேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டும், ‘விளியிசை’ என்புழி, ‘விளியிசைப்ப விண்ணகம் நடுங்க’ என்னும் பாட்டும், ‘முத்துறழ்’ என்புழி, ‘முத்துறழகவந்தேங்கி’ என்னும் பாட்டும், குறிப்பினான் முன்னின்ற மொழியான் அறியவந்தன’’ என்று நன்னூல் (268) மயிலைநாதர் உரை கூறுவதும் நோக்க இக்கருத்து வலியுறும். மேலும், ‘இது செய்யுளியலுடையார் காட்டும் பாட்டு’ ‘இஃது அணியியலுடையார் காட்டும் பாட்டு, என்று இன்னவாறு யாப்பருங்கல விருத்தி பரக்கக் கூறிச் செல்வதும் தக்க சான்றாம். எனினும், இவ்வுரையாசிரியர் எடுத்துக் கொண்ட இலக்கணத்திற்கு ஏற்ற எடுத்துக்காட்டுக் கிட்டாத இடங்களில் தாமே செய்யுள் யாத்தமைத்துக் கொண்டார் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க பொது நெறியேயாம். விருத்தியுரைகாரர் பல்கலைக் குரிசில்; பேரறிஞர்; நயத்தக்க உரையாளர்; சீரிய நினைவாளர்; நாடு கண்டவர்; வரலாற்றுத் தெளிவாளர்; பட்டறிவால் முதிர்ந்தவர்; சமயப் பொறையாளர்; சால்பாளர்; இன்ன பல நலங்களெல்லாம் துன்னிய செல்வர்; இவர்தம் நுணுகிய ஆராய்ச்சி நயங்களெல்லாம் விரிவாக மேற்கொள்ளத் தக்கன வாகலின் இவ்வளவில் இவ்வாராய்ச்சி யுரையை நிறுத்தி அமைவாம்.


‘‘சொல்லிற் சுருங்கிப் பொருள்பெருகித் தொன்ஞானம்
எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்
பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி
ஒருங்கறிய வல்லார் உணர்ந்து’’

தமிழ்த் தொண்டன்,  இரா.இளங்குமரன்