அறுபது சூத்திரங்களையும் செய்தருளியதாக ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இதனை நோக்குழி அகப்பொருள் இலக்கணமே பொருளதிகாரத்துள் சிறப்பித்துப் பேசப்படும் பெருமையும் வாய்ப்பும் அக்காலத்துப் பயின்றிருந்தது என நினையவும் இடந்தருகின்றது.

புறத்திணை அகத்திணைக்குப் புறனாம் என்று கூறிய வகையில் தொல்காப்பியரோடு ஒத்தும் எண்வகைத் திணைகளை விளக்குங்கால் புறப்பொருள் வெண்பாமாலையை ஒத்தும் புறப்பொருள் பற்றிய இலக்கணத்தை அமைத்துள்ளார் இவ்வாசிரியர்.

களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல்: இவ்விரு இயல்களும் திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய உரைச் சூத்திரங்களைத் தழுவி அமைந்துள்ளன. திருக்கோவையார் உரைச்சூத்திரங்களில் ஒரே நூற்பாவாக இருப்பது இந்நூலில் இருநூற்பாவாகப் பிரிக்கப்பட்டுள்ளது (835, 836 காண்க). 834, 838 - நூற்பாக்கள் திருக்கோவையார் உரைச் சூத்திரத்துள் உள்ளவாறே உள்ளன. ஏனைய நூற்பாக்கள் சொல்லளவில் சிற்சில மாற்றம் பெற்றுள்ளன.
 

  ‘‘ஐய நாட லாங்கவை யிரண்டு
மையறு தோழி யவன்வர வுணர்தல்’’
 
என்பது திருக்கோவையார் உரைச் சூத்திரம்.
 
  ‘‘ஐய மழிதலு மறிவு நாடலு
மையறு தோழி யவன்வர வுணர்தல்’’ (840)
 

என இந்நூலிலுள்ளது. இவ்விரு நூற்பாக்களும் சொல்வகையான் பெரிதும் வேறுபடுவன போலத் தோன்றினும் பொருள் வகையில் வேற்றுமையின்றி யுள்ளன. இந்நூற்பாவில் ஐயமறிதல் என்றிருப்பின் பொருத்தமுடையதாக இருக்கும். இங்ஙனமே 854ஆம் நூற்பாவில் முதல் வரியாக இருக்கும் ‘‘வரைந்த பின்னர் மணஞ் சிறப்புக் கூறா நிற்றல்’’ என்ற பகுதி நூற்பாவோடு இயைபுடையதன்று. திருக்கோவையார் உரைப்பகுதி அந்நூற்பாவினோடு இயைந்து விட்டது.

இவ்விரு இயல்களும் திருக்கோவையாருக்கு இலக்கணமாக அமைந்துள்ளமை பாராட்டுதற்குரியதாகும். நம்பியகப்பொருக் கிலக்கியமாய்த் தஞ்சைவாணன் கோவை அமைந்துள்ளது. இதுவோ திருக்கோவையாருக்கு இலக்கணமாய் ‘இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பலின்’ என்ற வகையில் அமைந்துள்ளது.