இந்நூலுரையாசிரியர் இந்நூலுக்குச் சிறந்த விருத்தியுரையருளிச் செய்தவர் தென்றிருப்பேரைப் பதியிற்பிறந்த காரிரத்நகவிராயர் என்பவரே. தென்றிருப் பேரையென்னும் பாடல் பெற்ற திவ்யதேசம் ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்துள்ளது. இவர், திருக்குருகைப் பெருமாள்கவிராயர் அநேகமாணாக்கர்க்குப் பாடமோதிக்கொண்டு சிறந்த வித்வானாயிருப்பதைக் கேள்வியுற்று அவரிடம் படிக்க ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அவரிடம் கல்விகற்றுச் சிறந்தவித்வானானார். செந்தமிழ்ப் பத்திரிகையில் இவரைக் குறிக்கநேரும்போதெல்லாம் இவர் பெயரை இரத்திநகவிராயரென்றே குறித்திருக்கிறது. ஆனால் உற்று நோக்கும்போது இவரது இயற்பெயர் ‘காரிரத்நகவிராய’ ரென்பதென்று தெரிகிறது. ‘காரிரத்நம்’ என்பது ஆழ்வார்திருநாமம். காரிராசன் பெற்ற இரத்திநம் போன்ற புதல்வன் என்பது இதன்பொருள். ‘காரிதந்தருள்கலைக்கடலியற்பெயர்புனைந்து’ (மா. அல) ‘காரிமாறன் சடகோபன்’ (திருவாய்) ‘காரி.. . . . . . . .ரத்நம்’ (மாறன்கோவை) முதலியவற்றையும் நோக்குக. இவருரை மிகவுஞ்சிறந்ததோருரை. இவ்வுரையின்றேல் இந்நூலின்பெருமை வெளிப்படாது. சங்க நூல்கள் பிற சான்றோர் நூல்கள் முதலியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். சில உதாரணச் செய்யுள்களிலுள்ள உள்ளுறையுவமம், ஏனையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றை அழகாய் விளக்குகிறார். சில உதாரணச் செய்யுளுக்குக் குறிப்புரையும் சிலவற்றிற்குப் பொழிப்புரையும் கூறுகிறார். இவர் வேண்டுமிடங்களில் தண்டிமதம், தொல்காப்பியர் போன்ற பிற நூலாரின் கருத்து முதலியவற்றையெடுத்துக் கூறித் தக்கசமாதானங் கூறுகிறார். உதாரணச்செய்யுள்களைச் சூத்திரப் பொருளோடு அழகாய்ப் பொருத்திக் காட்டியிருக்கிறார். இவர் காலம் முன்னே கூறப்பட்டது. இவர்செய்த வேறு நூல்கள் :- தொல்காப்பிய நுண்பொருண்மாலை, பரிமேலழகருரை நுண்பொருண்மாலை (இது செந்தமிழில் வெளிவந்துளது), ஆசிரியர் செய்த நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு விருத்தியுரை, மாறன்பாப்பாவினம் முதலியன. இவருக்குக் கோயிலில் ‘வாகனமாலை’ படிப்பதற்காக அக்காலத் தரசன் சிறந்த மானியங்கள் விட்டிருந்தான். அவற்றை இன்னமும் இவர் |