"விஞ்சைய ரதனைக் கண்டு
            மெய்பொதி ரெறிந்து விம்ம
வெஞ்சினங் கனன்று மீட்டும்
           விஞ்சைய னவனை நோக்கி
வஞ்சனை மனத்த ராய
           மனிசரை வலிய ரென்பாய்
அஞ்சினை பெரிது மேடா
          வென்றன னசனி யொப்பான்"
“நிலத்திடை மக்க ளாற்ற
         னின்னைப்போ லஞ்சு வார்க்கு
மலைத்துணை பெருகிக் காட்டு
         மற்றதிங் கெம்ம னோர்க்கோர்
இலைத்தது மில்லை மன்னோ
         வென்றன னிரண்டு திங்கள்
பிலத்திடை பொடித்த போலும்
         பிறழ்ந்திலங் கெயிற்றி னானே"
 

எனவரும் இச்செய்யுட்கள் வெகுளிச் சுவைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாதல் உணர்க.

     இச் செவ்விலேயே சடிமன்னன் சுயம்பிரபையை அழைத்துக்கொண்டு போய் அத்திவிட்டனுக்குத் திருமணம் செய்வித்தனன் என்னும் செய்தியினையும் ஒரு தூதன் வந்து அவ்வச்சுவகண்டனுக்குக் கூறிவிடுகின்றான். அம்மம்ம! அது கேட்டவுடன் இவன் வெகுளி எல்லை கடந்து ஊழித்தீயே யாகிவிடுகின்றது. இச்சின நிலையை இப்புலவர் பெருமான் வருணிக்கும் அழகு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. இதைக் கேளுங்கள்:
 

"அடிகளிவ் வவனி தன்மே
         லிழிந்தது மணங்கோ டொப்பாள்
கடிவினை நிலையு மன்றே
         கண்டுவந் தொருவன் கூறச்
சுடுசொலிஃ தொழிக வென்று
        துணைச்செவி புதைத்து வல்லே
முடிமுத றுளங்கத் தூக்கி
        முனிவினை முடிவு கொண்டான்"

"பெருகினான் வெகுளி கண்ணுட்
            பிறந்தது பிறங்கு செந்தீ
உருகினான் போன்று தோன்ற
           மயிர்த்துளை யுகுத்த தெண்ணீர்