viii

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

புலத்தின் தெளிவைக் காட்டுகிறது. எண்ணமும், பேச்சும், செயலும் என்று அனைத்திலும் உண்மையராய் விளங்கியமையால் அவரது தன்மைக்கு அடிமைப்பட்டு அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டோர் பல்லாயிரவர்; அவர்களுள் யானும் ஒருவன்.
பாவாணரொடு பழகிய நாள்களெல்லாம் என் வாழ்வின் வசந்தங்கள்; அந்நாள்களை எண்ணும் போதெல்லாம் என் மனம் இனிக்கிறது; உடல் சிலிர்க்கிறது. அரசியல் வாழ்விலும், தனித்தமிழ் வாழ்விலும் எனது நிலைப்பாட்டு உயர்வுக்கு அவரது வாழ்த்தும் அடித்தளமாக அமைந்திருந்தது என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றேன்.
தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டிருக்கிற என் அரசியல் ஆசான் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களால் ‘செந்தமிழ்ச் செல்வர்‘ என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துப் போற்றப்பட்டவர்.
கடையெழு வள்ளல்களை விஞ்சும் வள்ளல், புரட்சித் தலைவர் முதல்வராக இருந்த காலத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தும், பாரதியார் நூற்றாண்டு விழா எடுத்தும் அவர்கள் பெருமையைப் பாரறியச் செய்தார்.
புரட்சித் தலைவர் காலத்தில், சீரிளமைத் திறம் வாய்ந்த தாய்த்தமிழுக்கு அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாடு 1981-ல் மதுரையில் சீர்பெற நடத்தப்பெற்றது. அம் மாநாடுதான் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்திய இறுதி நிகழ்ச்சியாகும்.
புரட்சித் தலைவரின் அடியொற்றி அரசியல் தொண்டறம் செய்யும், இப்புத்தாயிரமாண்டின் மனிதப் புனிதவதி, மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பொற்கால ஆட்சியில் பாவாணர் நூற்றாண்டு நினைவாக அவரது நூல்கள் அனைத்தும் செம்பதிப்பாக வெளிவருவது போற்றத்தகுந்தது.
இம் முயற்சியில் ஈடுபட்டு உழைத்துப் பிழையின்றி நூல்களை வெளிக்கொண்டு வந்த பதிப்பாசிரியர் பெரும்புலவர் அ.நக்கீரனாரை வணங்கிப் பாராட்டுகிறேன்.
இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்தநாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழி காவலர் கோ.இளவழகன். பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட்டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு கோ.இளவழகன் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது.