பதிப்பாசிரியர் உரை |
xxxix |
பண்புநலன்கள் |
பாவாணர் குழந்தை உள்ளத்தினர்; கள்ளங் கவடில்லாதவர்; குழந்தையேயாயினும்
பாண்புடன் பரிவுகாட்டிப் பழகுபவர்; தமக்குச் செய்யப்பட்ட உதவி தினைத்துணையாயினும்
பனைத்துணையாக் கொண்டு பாராட்டும்
பண்பினர்; தமிழுக்குக் கேடு சூழ்ந்தார் எத்தகைய நிலையிலிருப்பினும் அஞ்சாது
கண்டிக்கும் துணிவினர்; கருமமே கண்ணாய், துயிலாது சோம்பாது பணிபுரிந்தவர்;
யாருக்கும் தலை வணங்காது நின்ற அரிமா! |
நூற்றாண்டு விழா |
பாவாணர் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு கொண்டாடப்பட வேண்டும். அரசு கொண்டாடுகிறதோ
இல்லையோ பன்னாட்டுத் தமிழரும் நூற்றாண்டு விழாவைச் செவ்வையாய்க் கொண்டாட
ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர்.
நூற்றாண்டு விழாக் காணும் பாவாணர் நினைவாக அவர் படைத்த
நூல்கள் அத்தனையையும் மறுபதிப்பாக வெளியிடத் தமிழ்மண் பதிப்பகம் முனைந்துள்ளமை
பாராட்டத்தக்கது. |
பதிப்பாசிரியர் நக்கீரன் |
நக்கீரன் எனும் நான் உறந்தைராயன்குடிக்காட்டில் அப்பாவு
- பாப்பம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 22-7-1927-ல் பிறந்தேன்.
தொடக்கக் கல்வியை உள்ளூரிலும், உயர்நிலைக் கல்வியை
உரத்த நாட்டிலும் பயின்றேன். 1946-ல் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்று
1947 முதல் ஆசிரியராய்ப் பணியாற்றினேன். 1954-ல் புலவர் பட்டமும், 1968-ல்
இந்தி விசாரத்துப் பட்டமும், 1979-ல் தமிழில் கலை முதுவர் பட்டமும் பெற்றேன்.
1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தில்பணியாற்றி
1986-ல் ஓய்வு பெற்றேன். |
பாவாணர் தொடர்பு |
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஒப்பியன் மொழிநூல்‘ தொடர்பாய்ப்
பாவாணருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1974 முதல் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
நான் பதிப்பாசிரியராய் இருந்தபோது செ.சொ.பி.அகரமுதலி முதன்மடலம் 1985-ல்
வெளியிடப்பெற்றது. என் பணியைப் பாராட்டியதோடு என்னை அகரமுதலிப் பணிக்கு அளித்துதவப்
பாவாணர் பாடநூல் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டார். ஆனால் நிறுவனம் மறுத்துவிட்டது.
நான் ஓய்வுபெற்றபின் அகரமுதலிப் பணியாற்ற விண்ணப்பம் அளித்தும் அமர்த்தம்
கிடைக்கவில்லை. ஓய்வு பெற்றுப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் பதிப்பாசிரியர்
முனைவர் இரா.மதிவாணன் பரிந்துரையின் பேரில் பதிப்பாசிரியராய்ப் பணியாற்றும்
வாய்ப்பினை என் 74ஆம் அகவையில் அரசு அளித்துள்ளது. |