இதனுள் இணையியைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. “பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் கன்னியம் புன்னை யின்னிழ றுன்னிய மயிலேய் சாயல் வாணுதல் அயில்வே லுண்கணெம் மறிவுதொலைத் தனவே.” இதனுள் இணையெதுகை முதலாய ஏழுவிகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. “சீறடிப் பேரக லல்கு லொல்குபு சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கி குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணு மிருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமும் துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தனை முனியா தென்று மின்னணம் ஆகுமதி பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே.” இதனுள் இணைமுரண் முதலான ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. “தாஅட் டாஅ மரைமல ருழக்கிப் பூஉக் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅண் மோஒட் டெருமை தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர் ஏஎ றாஅ நீஇ ணீஇர் ஊரன் செய்த கேண்மை யாய்வளைத் தோளிக் கலரா னாதே.” இதனுள் இணையளபெடைத் தொடைமுதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க. தொடை முற்றும். (5) உறுப்பியன் முற்றும். |