சா :
இடுகாடு, சுடுகாடு என்பவற்றை ஒன்றேபோலக் கருதினும் (நால்-
நான்) முன்னது புதைகாடு என்றும்
பின்னது சிதைகாடு என்றும்
வேறுபாடறிதல் வேண்டும்.
பழக்கம் தனியாட் பயிற்சி என்றும், வழக்கம் தலைமுறைப் பயிற்சி
என்றும் பிரித்தறிதல்
போலும் பொதுச் சொற்பொருண்மைத் தெளிவும்
அடங்கும். அம்பல் மொட்டு, முகை, முகிழ்,
மொக்குள், போது, அலர்,
மலர், செம்மல், வீ எனப்பூவின் வளர்ச்சியும், பேதை முதல்
கன்னிப்பருவம்போல்
வரையறைக்குரியன. களிறு பிளிறல், அரிமா
முழங்கல், மயில் அகவல், குயில் கூவல், காக்கை
கரைதல், மணியிரட்டுதல்
என்னும் ஓசைமரபும், முயல் உகளுதல் தவளை தவ்வல் போல்வனவும்
பகுப்பிற்குரியன.
282. நூ: அஃறிணைப் பொருட்குள ஆண்பெண் பெயர்கள்
ஒவ்வொரு குலத்திற்(கு) உரிமை ஆயதால்
இளமைப் பெயர்வகை வழக்கொடு கூறுவாம்.
பொ:
அஃறிணைப் பொருள்கட்கு உரித்தாய்த் தொல்காப்பியம் கூறிய
ஆண் பெண் பெயர்கள் ஒவ்வோரினத்திற்கும்
உரிமையாய்ப் பொருந்தி
விட்டமையின் ஈண்டு அவ்வழக்கழிவு விடுத்து இளமைப் பெயர் மரபை
மட்டில்
கூறுவாம்.
சா:
எருது, கலை, களிறு, சேவல், தகர், கடுவன் முதலிய ஆண்
பொதுப் பெயர்கள் முறையே காளை, மான்,
யானை, கோழி, ஆடு, குரங்கு
முதலியவற்றிற்குத் தனிப்பெயராயின.
‘அன்னச்சேவல்’ என்னும் இலக்கிய வழக்கு சேவலங்கொடியோன்
போன்றவற்றான் தேய்ந்தன.
பிறவும் அன்ன.
(பெடை, பேடை) பெட்டை, மந்தி, பிணை (பிணா) பிடி முதலிய பெண்
பெயர் முறையே கோழி, குரங்கு,
மான், யானை முதலியவற்றிற்கு ஒன்றின.
‘ஆண், பெண்’ என்னும் இருதிணைப் பொதுப்பெயர்கள்,
ஆடவர், மகளிர்
என்பனவற்றை மாற்றி உயர்திணைக்கே உரியவாயமை புதுமரபே.
283. நூ: பறவை இளமை பெரும்பால் குஞ்சு;
விலங்கு-குட்டி; மரப்பெயர்-கன்று.
பொ :
பெரும்பாலும் இளமைப் பெயர்களில் பறவைக்குக் குஞ்சும்,
விலங்குக்குக் குட்டியும், மரத்திற்குக்
கன்றும் வழக்குள ஆகும்.
சா :
கூவத்தெரியா குயிலின் குஞ்சு (பாவேந்தர்) கோழிக் குஞ்சு,
குஞ்சுப்புறா; ஆட்டுக்குட்டி, யானைக்குட்டி,
குதிரைக்குட்டி; வாழைக்கன்று,
மாங்கன்று.
|