பக்கம் எண் :
 
ஆக

        ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
        காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.    (திருக்குறள்)

    என வினைப்படுந் தொடர்ப் பெயர்க்கு முன் சுட்டு வருதல் ஒருபால்
செய்யுள் இலக்கிய வழக்கு என்க.

சிலசொல் வரையறை

292. நூ: செலலுறு வினைகள் படர்க்கை மட்டே
        வரலடிச் சொற்கள் தன்மை முன்னிலை.

    பொ: செல்வது குறிக்கும் வினைச்சொற்கள் படர்க்கையை மட்டும்
சாரும் வருதல் பற்றிய வினைச் சொற்கள் தன்மைக்கும், முன்னிலைக்கும்
ஆகும்.

    சா: அவனிடம் சென்றானாம்; என்னிடம் வந்தான்; உன்னிடம் வந்தானா?

    வி: முன்னூல் கூறிய தரல், கொடை இடவரையறையற்றன.  ‘செலலுறு
வினைகள்’ எனப் பொதுவிற் கூறியதனால் அவனிடம் போனான் முதலியவும்
படர்க்கைக் காதல் கொள்க.  ‘வரலடி வினை’ என்றது முக்கால வடிவங்களும் இத்தன்மையனவே-எனற்கு.  உறுதல், அடைதல் போலும்
பொதுவினை மூவிடத்திற்கும் பொதுவாம்.

293. நூ: முழுமையும் வரின்முற் றும்மை தவிரா.

    பொ: முழுமை தழுவிவரும் சொற்கள் முற்றும்மை தவிராவாம்.

    சா: முத்தமிழும் பயின்றான்.  ஏழிசையும் வல்லான்.  தொகைச் சொல்
அன்றி முழுமைச் சொல்லிலும் உம்மை வரும்.

சா: உலகனைத்தும் இகழ்ச்சி சொல ‘உலகம் யாவையும்’
  உடல் முழுதும் வலிக்கிறது. (எல்லாம்)

        இன்று சாதி இருத்தல் வேண்டுமென்று யாரும் கூறார்.
        இனிச் சமயத்தில் நிலவைத் தேவனாக்கி எதுவும் எழுதார்.
        நாள் எல்லாம் உழைத்தும் நலிகிறான் பாட்டாளி.

    எல்லாமும் என வாராதது இறுதி மவ்வொற்றில் உம் உடனொலித்தல்
வாய்ப்பின்மையான் மறைந்தொலிக்கும் என்க.

    நாளும்-தினமும், தினம்-(நாளும்) - ஒப்பு.
    வடமொழிக்குப் பேச்சு வழக்கு என்றும் இல்லை.
    அணுத்திரளாத பொருள் எங்கும் இல்லை எனக் கால இடவரையறைப் படுத்தலும் உம்மை பெறும்.

294. நூ: பல்பொருள் தொகுப்பு தொகுதி ஒருமை.