பக்கம் எண் :
 

வினைமுற்றுகள்

317. நூ: வேண்டும் என்பது வேளடி யாக
        விரும்பற் பொருள்தந் தின்றுதே வைப்பொது.

    பொ: வேள் என்னும் அடியாகத் தோன்றும்வேண்டும் என்னும் சொல்
முன்பு விரும்புதற் பொருள் தந்து இன்று தேவையைப் பொதுவிற் குறிக்கும்.

        புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (குறள்)
        தமிழுக்கு அறிவியற்கலை வேண்டும்-என்பது வழக்கு.
        அத்தாநான் வேண்டுதல் கேட்டருள் புரிதல்வேண்டும்

-(அருட்பா)

    பொதுவென்றதனால் முன்னே தன்மைப் பன்மையாகவோ செய்யும்
என்னும் முற்றாகவோ தனித்து இயங்கியதாதல் உணர்க.  முன்னதாய்க்
கொளின் வேண்டாம் என்றும் பின்னதாக் கொளின் வேண்டா என்றும்
எதிர்மறையாகக் கூறல் தகுமாகலானும் பரவிய வழக்காகலானும் இரண்டுமே
பிழையின்மை அறிக.

    பல பொருள் ஒரு சொல் போல மிக்காவலை உணர்த்தும் வேணவா
என்பது, வேளடியாய்ப் பிறப்பதை வேண் என்னும் திரிபுருவை
வேட்கையொடு ஒப்பிட்டு உண்மையறிக.

318. நூ: காணாம் என்ற தன்மைப் பன்மை
       காணா மைக்குக் கருத்தாம் இன்றே.

    பொ : (யாம்) காணாம் என்ற எதிர்மறைத் தன்மைப் பன்மை
வினைமுற்று இன்று பொதுவாய் ஒரு பொருள் காணாமையைக் குறிக்கும்
கருத்துடையதாயிற்று.

    என் கரிக்கோலைக் காணாம்; நங் கணத்தினுட் காணோம் (திரு) மற்று,
தன்மைப் பன்மை இறு நிலை மேலிரண்டாம்-காணோம் --> காணேம்
என்பதும் இயையும்.  மூன்றில் ஏதொன்றும் ஆகலாம் இது.  தன்மைக்குரிய
இவ்வினை பொதுவில் வருவது உணர்க.

சில சொல் திரிபுகள்
முதல் திரிபு

319. நூ: யாமுதற் சிலசொல் ஆமுதல் ஆகும்.

    பொ: யா முதலாக அமைந்த பழஞ்சொற்கள் சில நடையில் ஆ
முதலாக மாறியமைதல் உளவாம்.