பக்கம் எண் :
 
328

328. நூ: இருகுறில் முன்வரும் சொல்முதல் உயிர்நீண்(டு)
        ஒருநெடி லாகவும் உருவுறல் உண்டே.

    பொ: சில சொற்களில் சொல் முதலாக வரும் இருகுறில்களுள்
முதலெழுத்துயிர் நீண்டு ஒரு நெடிலாக உருப்பெறுவதும் உண்டு

    சா: துகள்-தூள், முகவாய்-மோவாய்.  பிதற்றல்-(பிதத்தல்) பேத்தல்;
பொழுது-போது, (பகுத்தல்) பகல்+பால் (ஐம்பால்) அகல்-ஆல் (ஆல்போல்
தழைத்து), அகழ்-ஆழ் (ஆழி) தொகுப்பு தோப்பு. பெயரன்+பேரன்,
பெயர்த்தி+பேர்த்தி, பெயர்+பேர், அகத்துக்கு+ஆத்துக்கு (பார்ப்பன வழக்கு)
இவை போல்வன கொள்க.  உனக்கு-(னே) நோக்கு; எனக்கு-(னே)நேக்கு -
இவை பிழை

    (பகுத்து) பாத்தூண் மரீஇயவனை, எனப் பெயராயும், ‘தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால்’ என வினையாயும் திரியும்.  வளை + அகம் = வளாகம்.  என இரு சொற்புணர்வில் நிற்றலும் அடங்கும், எனில்-ஏல் (செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று) எனினும்-ஏனும் (தேர்வாரேனும் பணி கிடைப்பதரிது) எனின்-திரியாது.  (ஏனும் - ஏயும் எனத் திரிதல் ஒருபால் வழக்கு -நகையேயும், கணமேயும்) என்னும் இடைச்சொற்றிரிபுகளும்
இத்திறத்தன.

    இதன் போலியாய் மோத்தல்-முக(ர்)தல் - (நல்)குரவு என எதிர்மாற்றி
உரைத்தல் பழம்பிழை வழக்கு.  இயல்-ஏல் என இம் முறையால்
மாறிற்றன்று.  இவை வேறுபட்ட தன்மையன (இயற்கை) இயன்றதைக்கொடு
கொடுப்பதை ஏற்றுகொள் (ஏனம்).  செய்தி-செயிதி-சேதி என்னும்
முரண்திரிபு ஒருசார்.  வீழ்து; விழுது (போழ்து-பொழுது-போது) இவ்விதிக்கு
அடி-

        ‘குறுமையும் நெடுமையும் அளபிற்கோடலின்
        தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தியல’

என்னும் முதனூல் நூற்பாவே.

    முன்னெழுத்து நீளும் இப்பெரும்பால் போக்கன்றிச் சிறுபால்
குணவாளன் - குணாளன் (மணவாட்டி - மணாட்டி) என இரண்டாம் எழுத்து
மிகலும், மாட்டுப்பெண்(ணா) நாட்டுப் பெண் என்றும் நிரம்ப - ரொம்ப -
நொம்ப என்னும் ஈரெழுத்தும் திரிதல் வழக்கும் உள.  இவை பிழை.

329. நூ: இ உ வை எ ஒ வாய் ஒலித்தல் வழக்கு.

    பொ: ‘இ’ யையும், உவ்வையும் ‘எ’ யாகவும் ஒ வ்வாகவும் ஒலிப்பது
வழக்குரிமை.

    சா: இலை - எலை, உரல் - ஒரல் என்பன கீழ்வழக்கு.