பக்கம் எண் :
 
New Page 1

    தெரியும் என்பது இசைப்பாட்டு நலத்தையும், பாடல் தெரியும் என்பது
இயற்பாட்டுப் புலத்தையும் குறித்துப் பொருள் வேறுபாடுறுதல் அறிக. அன்றி,
‘பாட(ல்) வந்தான்’ - என்றும் இடத்து இடரல் அறிக. இவ்வினை
ஆங்கிலத்தில் உள்ள  (Infinite verb) முற்றாவினை(த்தொடர்) என்று
பாவாணர் கூறுதல் மிக்கியைபுடையது.

பயனிலை

388. நூ: எழுவாய்ப் பொருள் நிலைப் படுமிடம் பயனிலை.

    பொ: எழுவாயின் பொருள் நிலைப்பட்டு முற்றுகின்ற முடிவிடம்
பயனிலையாம்.

    சா: பல் பல; பல் விழுந்தது; பொய்ப் பல் எது?

    வி: பயனிலை - பொருள்நிலை ஒரு பொருளுடையன என்பர் சிவஞான
முனிவர். முதல் வேற்றுமையின் முடிவாகக் கூறிய பெயர், வினை வினா,
பயனிலையாதல் நினைவுறுக. மற்று ஒரு தொடரில் எழுவாய் பயனிலை
அறியப்புகின் முதற்கண் பயனிலையைத் தொடரிறுதியிற் கண்டு அதன்வழி
எழுவாய் அறிதல் எளிதின் முடியுமாம்.

சா: (1) சிறு நாடுகள் விடுதலை வேண்டுகின்றன,
  (2) தனியுடைமை, பொதுவுடைமைப் போர் உலகில் முற்றி நிற்கிறது.
  (3) இந்திய நாடு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டுத் தேர்தலில் பெரிதும் திருப்பு முனைக்கு உள்ளாகி இருக்கிறது.

செயப்படுபொருள்

389. நூ: செயப்படு பொருளது எழுவாயாலே
        செய்யப் படும்பொருள்; இரண்டனுரு பேற்கும்.

    பொ: செயப்படு பொருளாவது எழுவாயினால் செய்யப்படுகின்ற
பொருளாம். அஃது இரண்டாம் வேற்றுமை உருபேற்று வரும்.

     சா: மாந்தன் இயற்கையை ஆராய்கிறான். (விரிந்து நிற்பது)
        தந்தை பொம்மை வாங்கினார். (தொக்கு நிற்பது)

எழுவாயை அறியும் சிறார் நெறிபோலும், செயப்படு பொருள்
மேற்கொள்ளும் ஐ உருபை ஏற்றிப் பயனிலையை நோக்கி எதை, யாரை என
வினவின் செயப்படுபொருள் புலனாம் என்க.