பக்கம் எண் :
 
395

395. நூ: செய்வினை செயப்படு வினையாய் மாறச்
        சொல்லிடை நிகழ்வெதிர் பொழுதில் ‘படு’வும்,
        இறப்பில் ‘பட்டு’வும் புகுத்திக் கூறல்.

    பொ: செய்வினையைச் செயப்பாட்டு வினையாய் மாற்ற அச்சொல்லின்
இடையே நிகழ்கால, எதிர்காலச் சொற்களில் ‘படு’ என்பதையும்,
இறந்தகாலத்தில் ‘பட்டு’ என்பதையும் புகுத்திக் கூறவேண்டும்.

    சா: நி:- மாணாக்கர் ஆசிரியரை மீறுகின்றனர்.
           மாணாக்கரால் ஆசிரியர் மீறப்படுகின்றனர்

        எ:- மாணாக்கர் ஆசிரியரை மீறுவர்
            மாணாக்கரால் ஆசிரியர் மீறப்படுவர்

        இ:- மாணாக்கர் ஆசிரியரை மீறினர்
            மாணாக்கரால் ஆசிரியர் மீறப்பட்டனர்.

    இதுபோன்று பிறவும் இயலும்.

தன்வினை - பிறவினை

396. நூ: எழுவாய் வினையை நேருறக் கூறல்
        அயலுக் கெழுவாய் ஆற்றுவ துரைத்தல்
        முறையே தன்வினை பிறவினை யாகும்.

    பொ: எழுவாயின் வினையை நேரே கூறுதலும், அவ்வெழுவாய்
அயற்பொருளுக்கு ஆற்றிய வினையைக் கூறுதலும் முறையே தன்வினையும்,
பிறவினையும் ஆம்.

    சா:   மக்கள் பழத்தை வெட்டுவர்; மரத்தை வெட்டுவிப்பர்.
          இராசராசன் பெருங்கோயில் கட்டினான்.
          இராசராசன் பெருங்கோயிலைக் கட்டுவித்தான்.

    இவ்விரண்டனுள் முதல்தொடரில் பிறவினை மறைந்து வந்ததன்று.
முதலது பொருளாண்மையும், மற்றது செயலாண்மையும் பற்றியமைந்தன.

397. நூ: தன்வினை பிறவினை யாக, வினையை
        முதனிலை யடுத்துச் செறித்தலும், முதனிலை
        மெலியை வலித்தலும் வலியிரட் டலுமாம்.

    பொ: தன்வினையைப் பிறவினையாக மாற்றுவதற்கு ‘வி’யையும்
‘பி’யையும் சில முதனிலையை யடுத்து ஏற்ப இயைத்தலும், சில முதனிலையின் மெல்லினமெய் வல்லினமாதலும், சில வலி இரட்டித்தலும்
ஆம்.