பக்கம் எண் :
 
46

46. நூ: அதுவே,
       வினைபெயர் இரண்டாய் ஐந்தொகை யாய
       திணைபால் எண் இடம் காலம் காட்டும்.

    பொ: சொல், வினை, பெயர் என்று இரண்டு பிரிவாய் ஐந்தொகை
என்று இலக்கணத்துச் சிறப்பிக்கத்தக்க திணை, பால், எண், இடம், காலம்
இவற்றைக் காட்டும்.

    வி: முற்று வினை ஐந்தையும்காட்டலின் முற்கூறப்பட்டது.  பெயர்
காலந் தவிர்ந்தனவே காட்டுமெனினும் வினையாலணையும் பெயர்
காலத்தையும் காட்டலின் ஐந்தொகைக் குரித்தாயிற்று.

    சா: நடந்தான், தோழன், நடந்தவன்.

ஐந்தொகை

47. நூ: முழுவுலகத்தையும் தழுவ நோக்கி
       ஒழுக்கப் பொருளில் வகுத்த திணையில்
       மாந்தர் உயர் திணையாகவும் மற்றை
       உயிருடையனவும் உயிரில்லனவும்
       அஃறிணையாகவும் அமைக்கப்படுமே.

    பொ: உலக முழுவதையும் ஊடுருவி நோக்கி ஒழுக்கம் பற்றிய
கருத்தில் தமிழில் வகுத்துள்ள திணைப் பிரிவில் உயர்வொழுக்கம் வாய்ந்த
மாந்தரை உயர்திணையாகவும், பிற உயிருள்ளவற்றையும்
உயிரில்லாதவற்றையும் அஃறிணையாகவும் அமைத்துக் கொள்ளப்படும்.

    சா: கோவலன், கண்ணகி - உயர்திணை.
        கிளி, யானை, வாழை, மலை - அஃறிணை.

    திணைக்குக் குலப்பொருள் கூறலும், அறிவுப் பொருள் கூறலும் ஒழுக்கச்
சார்பாய் அமைவன ஆதலின் அனைத்தும் அடங்க ஒழுக்கம் எனப்பட்டது.

48. நூ: மாந்தர் போன்று மனமுடைத்தாக
       நூல்கள் புனைந்து நுவலப் படுவோர்
       உயர்திணைக்குரிய பெயர்வினை பெறுவர்.

    பொ: மாந்தர் போன்று அறிவுடைப் பொருளாக நூல்களில் உயர்த்திக்
கூறப்படுவோர் பெயராலும் வினையாலும் உயர்திணையாவர்.