பக்கம் எண் :
 

    சா: 1) சிவன் இருந்தான்.
        2) சிவன்-ஐ-வணங்கினேன்.
        3) சிவன்-ஓடு-ஒன்றினேன்.
        4) சிவன்-கு-ப் படைத்தேன்.
        5) சிவன்-இன்-சீரியோர் யார்?
        6) சிவன்-அது-ஊர்தி நாம்.
        7) சிவன்-கண்-அன்பு செய்.
        8) சிவன்-ஏ-காப்பாற்று.

    இத்தொடர் முறைகளை ஒப்பிட்டு வேற்றுமைப் பாடுணர்க.

68. நூ: முதல் வேற்றுமை முழுப் பெயர்மட் டுருபே.

    பொ: முதல் வேற்றுமைப் பொருளும் உருபும் முழுப்பெயர் மட்டும்
தொடர்ப்பட நிற்பதே.

    சா: அமைச்சர் வந்தார்.

69. நூ: வினைமுதல் தானே எழுவாய் ஆகும்.

    பொ: ஒரு தொடரின் செய்பவனே எழுவாய் எனப்படும்.

    சா: நம்பி நாயொடு வந்தான் - என்றவிடத்து இரு பெயர் இருப்பினும்
நம்பியே நாயை நடாத்துநன்; ஆதலின் அவனே பயனிலை வகையில்
எழுவாய் ஆயினன்.

    விரி: செய்பவன் எனப்படுவான் என முடியாமை, செய்வது என்றும்
தொல்காப்பியம் (சொல் 108) கூறியதுபோல் ஈண்டுப் பால் நோக்கம் இன்றி-
செய்கை, செய்பொருள் நோக்கம் வேண்டியே.

    ககர வரிசையில் எழுத்தாம் கை என்பதே உறுப்பு வரிசையில்
சொல்லாதல் போல, மற்று பெயர் தனித்து நிற்குங்கால் பெயர் என்றும், ஒரு
தொடர்ப்பட்டு வினைப்படும் போதில் எழுவாய் என்றும் கூறுதல்
வேறுபாடறிக.  நன்னூல் (295) எழுவாய் என்னும் சொல்லை முற்கூறிய
வைப்பில் முன்னது (292) என்று சுட்டியதே (ஒப்பு 381).  ஆயின் அதுவே
தொடர் முதலில் வந்து தொடர்ப் பொருட்கு எழுவாயாய் இருத்தலின்
வினைமுதற் பொருளில் (152) வழங்கத் தொடங்கியது.

70. நூ: வேற்றுமை உருபுகள் ஏற்றிடுங்காலை
       யான் யாம் யாங்கள் மூன்றும் முறையே
       என்எம் எங்கள் என்று தன்மையும்