பக்கம் எண் :
 

        நீ, நின் உன்னென, நீம் நும் உம்என
        நீங்கள் உங்கள் எனமுன் னிலையும்
        தான் தாம் தன் தம் எனப் பொதுவும் மாறும்.

    நு: இது, முதல் வேற்றுமையாம் இடப் பெயர்கள் பிறவேற்றுமைக்
காங்கால் அமையும் மாற்றம் கூறுதல் நுதலிற்று.

    பொ: வேற்றுமை உருபுகள் ஏற்கும்போது தன்மைப் பெயர்களுள் நீ,
நின் என்று பின் திரிந்து உன் என்றும்; நீம் என்பது நும் என்றும் திரிந்து
உம் என்றும், நீங்கள் உங்கள் எனவும்; பொதுப் பெயரில்தாம் தான் என்பன
தம் தன் என்றும் மாறும் என்பது.

    விரி: நீம்-கள் என்பதிணைந்தே நீங்கள் என்னுஞ்சொல்
தோன்றியமையின், நீம் என்னும் பண்டை முன்னிலை ஒருமையின் திரிபே
நும் ஆகலானும் நீர், நீவிர், நீயிர் இவற்றின் திரிபாகாதென்பதுணர்த்தவும்
ஈண்டடக்கிக் கூறப்பட்டது.  இங்குக் கூறாத பிற பெயர்கள் திரியா என்பது. 
தன்மையில் நாம் மட்டில் நம் எனத் திரிதலின் தழுவ விடுத்தாம்.

71. நூ: வினைபெயர் வினாவே எழுவாய்ப் பெயரை
       முடிக்கும் சொற்களாய்க் கிடக்கும் பயனிலை.

    பொ: எழுவாய்ப் பெயரைத் தொடர்ப் பொருளில் முடிக்கும்
பயனிலைச் சொற்களாய் வருவன - வினைச்சொல், பெயர்ச்சொல்,
வினாச்சொல் இவையே.

    சா: நெஞ்சு நெகிழ்ந்தது; மொழிபல; கடவுள் யாது; பிறவுள போல்
தோன்றுவவெல்லாம் இம்மூன்றுள் அடங்கும். கொக்கு வெண்மை என்பதில்
பண்பு பெயரிலடங்கியும், கொக்கு வெண்மை நிறம் உடையது என
மறைவினை விரிப்பில் அடங்கியும் உட்படுதல் காண்க.  மற்று வியங்கோள்,
ஏவல், உண்மை முதல வினையிலே அடங்கும்.

72. நூ: இரண்டன் உருபு ஐ; பொருள் செயப் படுபொருள்

    பொ: இரண்டாம் வேற்றுமை உருபுஐயே, அவ்வேற்றுமை வரும்
பொருள் செயப்படுபொருள் ஆகும்.

    சா: ‘தந்தை மகளைக் கொடுத்தான்’.  இச்செயப்படுபொருளை ஆக்கல்,
அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை, விரும்பல், அறிதல்
முதலவாக விரிப்பர்.

73. நூ: மூன்றன் உருபே ஒடு ஓடு உடனே;
       தோன்றும் பொருள் உடன் நிகழ்வு; மேலும்
       ஆன், ஆல் உருபையும் அவற்றின் கருவிப்
       பொருளையும் இதனொடு பொருத்திக் கூறுவர்.