பக்கம் எண் :
 
92

92. நூ: தன்மைப் பன்மை என்பது தன்னொடு
       முன்னிலையாதல் படர்க்கையாதல்
       கூட்டியுரைக்கும் கூட்டக்குறியே.

    பொ: தன்மையில் பன்மையென்பது தன்னொடு முன்னிலை யாரையோ படர்க்கையாரையோ சேர்த்துக்குழுப்படுத்தி உரைப்பதே.

    சா: யாம்-தன்மைப்படர்க்கை; நாம்-தன்மை முன்னிலை.  இரண்டினும் கள்சேரினும் இவ்வுணர்ச்சிப் படாமைகாண்க. இவையிரண்டும் இன்று மதிப்பொருமை பற்றியே நடத்தல் இயல்பு.  எனவே பிறதன்மைப் பன்மைகளைப் பொருளறிந்தாள்க.

93. நூ: கு, டு, து, று இறுதி தன்மை ஒருமையும்
       உம்மூர் அவையே பன்மையும் பழமை

    பொ: குடு துறு இறுதி தன்மை ஒருமை சுட்டலும், கும், டும், தும், றும் என உம் ஊர்ந்த அவையே தன்மைப் பன்மையைச் சுட்டலும் பழமைப் பாங்கின.

சான்று பண்டை நூலில் கண்டுகொள்க.

94. நூ: ஆய்ஐ இறுதியும் செய்யின் நிழலாம்
       ஏவலும் பிறவும் முன்னிலை ஒருமை
       (இயென் இறுதி பழமை வழக்கே).

    பொ: ஐ, ஆய் என்னும் இறுதியும் செய் என்னும் வாய்பாட்டு ஏவலும்
பிறவும் முன்னிலை ஒருமை.  இகர இறுதி ஒருமைக்காதல் பழமை வழக்கு.

    சா: உண்டாய், உண்டனை, உண், உண்டி.  வாய்பாடாவது செய்
என்னும் சொல்லொத்தொலிப்பன. செய்-கொய், பெய் என இறுதி ஒத்தலின்றி
முழுதொத்திசைப்பனவே பெரும்பால்; சொல் கொள்; உண்; தின்; நட, படி,
பார், வாழ், வை, போ, வா முதலியன.  மற்று, செய்-செய்த-செய்கின்ற,
செய்யும், செய்து, செய்ய செயின் என மாறினால்-அக்கால் செல்-சென்ற,
செல்கின்ற, செல்லும், சென்று, செல, செலின் என நிழல் போல்
ஒத்தொலிக்கும் அனைத்துச் சொல்லையும் சுருங்கக்குறிப்பது.

95.  நூ: உம்மென் இறுதி உயர்வொருமைக்கே;
        கள் பின் இணைந்து பன்மையாம் முன்னிலை.

    பொ: உம் மென்னும் இறுதி உயர்வொருமை முன்னிலையாம்;
அதன்பின் கள் இணைந்து முன்னிலைப்பன்மையாக்கும்.