பக்கம் எண் :
 
99

99. நூ: இரு, இடு எனுமிவைபோல்வன துணைவினை.

    சா: எழுந்திருந்தான், வந்திடுவான்.

    வி: பண்டைய இலக்கியத்துத் தரு, வரு இரண்டும் துணைவினையாய் இயங்கும்.

    நாயகன் சேவடி தைவரு சிந்தையும்; எளிவந்த பிரானை; (தேவாரம்)
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதருகின்றேன் (திருப்பாவை) எனவும்
தெருமந்து போதந்து எனவும் வரும்.  துணைவினையாவது
தனித்துத்தனக்குள்ள பொருள் குன்றிப்பிறிதொரு வினையிடைப்புக்கு நின்று
பொருள் வேறுபடுத்தாமை.  வந்துவிட்டான்; எடுத்துக்கொண்டான் என்ற
இடத்து, விடு-கொள் என்பன துணைவினையாயினும் சிறிது உணர்ச்சி
மீப்படுத்தல் காண்க.

100. நூ: இல்லை வேறுண்டு வேண்டும் என்பன
       இருதிணை ஐம்பால் மூவிடம் விரவும்.

    பொ: இல்லை, வேறு, உண்டு வேண்டும் என்பன இருதிணை ஐம்1பாலுக்கும் பொதுவாக விரவிவரும்.

    சா: நான், நீ, அவள், அவன், அது, அவர்கள், அவை-இல்லை, வேறு, உண்டு, வேண்டும்.

    திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.

101. நூ: தமிழில் செய்யென் பதுபொது வினைச்சொல்.

    பொ: தமிழ் மொழியில் ‘செய்’ என்பது பொதுவான
வினைச்சொல்லாகும்.

    சா: உண்டான்-உண்ணுதலைச் செய்தான்.

    நடந்தான் - நடத்தலைச் செய்தான் என்று செயப்படுபொருளில்லா
வினைக்கும் பின்னணியாதல் காண்க.  இப் பொதுமை பற்றியே சொற்சாயல்
ஒத்து வகுக்கும் வாய்பாட்டிற்குச் செய்தல் என்னும் வினையே
மேற்கொளப்படுதல் அறிக.

102. நூ: செய்யும் என்னும் முற்று வினைச்சொல்
       அஃறிணை இருபாற்கல்லது செல்லா.

    பொ: செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுச் சொற்கள்
அஃறிணைக்குரிய ஒன்றன்பால், பலவின்பால் இவற்றுக்கன்றி உயர்
திணைக்குரிய முப்பாலுக்கும் செல்லாவாம்.

    சா: அதுவரும்; அவைவரும்.  பலர்பால் தவிர்ந்த நாற்பாலுக்கு
முன்னூற்காலங்களில் ஆகிவந்த செய்யும் முற்று இக்கால் இரண்