பக்கம் எண் :
 
இவ

    இவ்வைந்தையும் படைக்கும்போது ஒருத்தியைக் குறித்தல் வேண்டின்
அவ்வத்தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம்.  ‘திகழ்
செவ்வான் மதிமுகக்குழல் நின்றாள்’

    ‘திகழ் செவ்வண்ண வானில் உலவும்மதி போன்ற முகமும், குழலும்
கொண்ட மகள் நின்றாள்’ என விரித்து அறுதொகையும் கண்டுகொள்க.

123. நூ: தன்பொருள் அன்றிச்சொற்பொருள் பிறபொருள்
        நன்குணர்த்துதலான் அன்மொழித் தொகையும்
        ஆகுபெயரே ஆகும் எனினும்
        தனிச்சொல் அன்றித்தொகைச் சொல்லின்பின்
        புறத்துப்பிறவாது நிலைக்களப் பிறப்பால்
        பிரித்திங் குரைக்கப் பெற்றதென்க.

    பொ: வெளிப்பட நிற்கும் சொல்லின் பொருள் தன் பொருளை
விடுத்துப் பிறிதொரு மறைவுப் பொருளைத் தெளிவுற உணர்த்தலால்
அன்மொழித் தொகையும் ஆகுபெயரும் ஒன்றே என்னும் ஒற்றுமை
இருப்பினும், ஆகுபெயர் தனிச்சொல்லின் புறத்துப்பிறத்தல் போலன்றி
அன்மொழித் தொகை, தொகைச் சொல்லின் நிலைக்களத்துப் பிறத்தலான்
இங்குப் பிரித்துக்கூறப்பட்டது என்க.

    விரி: ஒள்ளிறை (அப்பலோ)ப் பயணத்தைக் கண்டு உலகமே வியந்தது. 
மக்கட்கு ஆகிவரும் உலகம் பேருலகம் எனப்பண்புத் தொகையாய் மாற்றி
விடுவதால் மட்டே அன்மொழித் தொகையாகிவிடாது. அச்சொல்லின்
நிலைக்களத்திலிருந்து பிறத்தல் வேண்டும்.  இதனானன்றே,

    ‘ஒண்ணுதற்கு ஓ ஒ உடைந்ததே’ என்ற விடத்துப் பரிமேலழகர்
ஒள்ளிய நுதலையுடைய பெண்ணை அன்மொழியாய்ப் பொருள் கொள்ளாது
பண்புத்தொகையாதலோடே உரையாக்கினர்.

    புறத்துப் பிறத்தலாவது-சொல்லின் புறத்தே அச்சொல்லாற்றலால் பிறிது
பொருள் தோன்றுவது.

    நிலைக்களத்துப் பிறத்தலாவது-சொல்லின் பொருள் எழுங்கருத்
துணர்ச்சியின்று அடிப்படப் பிறிது பொருள் தோன்றுவது.

    அறுகால் (வண்டு) இரு பெயரொட்டாகு பெயர் எனப் பிரித்து,
அன்மொழித் தொகையோடு உரசுதல் பெரும் பயனின்று.

124. நூ: ஒருதொகைச் சொல்லே பலதொகைச் சொல்லின்
        உருவொடு நிற்கும்; உற்றறிந்துணர்க.