பக்கம் எண் :
 
166

166. நூ: செய்துவாய் பாட்டில் அடக்கும் இகர
       இறுதி உவ்விறு முதனிலை ஊருமே.

    பொ: செய்து என்னும் வாய்பாட்டினே அடக்கிக்கொள்ளக் கூறும் இகர
இறுதி வினையெச்சம், உகர இறுதி முதனிலைமேல் இகரம் ஊர்வதானால்
ஆவதாம்.

    சா: வணங்கினான், ஓடினான், உதவினான்.  சிவணி(பொருந்தி) அணரி
(அணர்ந்து) என்று மெய்யிறுதிமேல் ஏறிவரும் சொற்கள் வழக்கற்றன. 
வாய்பாடு கூறிய எச்சங்களைப் பழமை மீறிப் பிரித்தது தெளிவிற்கே.

இடைநிலை

167. நூ: இறுநிலை அடுத்தே அணுகத் தக்கது
       இடைநிலை; காலத்தாலது மூன்றே.

    பொ: ஒருசொல்லைப் பிரிக்குங்கால் முதனிலை இறுதிநிலை அறிந்து
கூறுணர்ந்தபின் பிரிக்கத்தக்கது இடைநிலையே அது காலங் காட்டலால்
மூன்றாய் வரும்.

168. நூ: த்,ட்,ற் இன்,ன்,இ இறப்புக் கிடைநிலை;
       கிறு,கின்று நிகழ்வு; ப் வ் எதிர்வே.

    பொ: த், ட், ற், இன், இன் முன்பின் குறைந்த ன், இ, இறந்த காலம்
காட்டும்; நிகழ்காலத்திற்குக் கிறு, கின்று; எதிர்காலத்திற்கு ப், வ்.

    சா: முடித்தான், கண்டான், நின்றான், வாங்கினான், ஆனான், ஓங்கியது
    வருகிறான்; தருகின்றான். காண்பார்;  செல்வாய்.

    வி: ஆ நின்று என்று நிகழ்காலத்துக் கூறிய பிறிதோர் இடைநிலை
உண்மையில் ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சமாய் ‘ஆவிருந்து’
என்றெலாம் பிரிக்க நின்றமையின் விடுத்தாம்.  ஆனான், போனான்
ஒன்றிரண்டே ‘ன்’ இடைநிலைச் சான்றுகள்: ஓங்கினது இடைநிலைக்
குறையின்றேனும் தாழ்வழக்காய்க் கருதப்பெறுகிறது.

169. நூ: இன்னே உவ்விறு முதனிலைக் கிடைநிலை.

    பொ: ‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை, உகர இறுதியாய் வரும்
முதனிலைக்கு உரியதாய் ஒட்டும்.

    சா: வாங்கினான், பாடினான் பிறவும் இவ்வாறே காண்க. 
போகி(யி)னான், சொல்லினான் என மாறி வருதல் மிகச் சில.  அவையும்
போகு,  சொல்லு எனுன்ம் முதனிலை எனவுமாம்.